"எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்!" - அமைச்சர் ரகுப...
`ஒரு துளி கருப்பு ரத்தம் எடுக்க ரூ.7000' - மூட்டுவலி சிகிச்சை எனக் கூறி முதியவர்களிடம் நூதன மோசடி
குஜராத் மாநிலத்தில் முதியோர்களிடம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கும்பல் நூதன முறையில் மோசடி செய்துள்ளது. முதியோர்களுக்கு அதிக அளவில் மூட்டு வலி இருக்கும். இதனால் அவர்களால் அதிகமாக வெளியில் செல்ல முடியாது. மூட்டு வலிக்கு எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் அதிகமானோர் சிரமப்படுகின்றனர்.
இதனை பயன்படுத்திக்கொண்ட ஒரு கும்பல் முதியோர்களுக்கு சிறப்பு பிசியோதெரபி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது. அகமதாபாத்தில் 85 வயது முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அவருக்கு கடுமையான மூட்டு வலி இருந்ததால் அவரால் பெரிய அளவில் வெளியில் செல்ல முடியவில்லை. அவரது மூன்று மகன்களும் அரசு வேலையில் இருக்கின்றனர். 85 வயது முதியவர் மூட்டு வலிக்காக மருத்துவமனைக்கு சென்று வந்ததை ஒரு கும்பல் கண்காணித்து அவரது மூட்டு வலியை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

அக்கும்பலை சேர்ந்தவர்கள், மூட்டு வலியை குணப்படுத்த தங்களால் முடியும் என்றும், பலருக்கு இது போன்று மூட்டு வலியை குணப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரபல டாக்டர் திவான் என்பவரது பெயரை சொல்லி அவர் மூலம் சிகிச்சை கொடுப்பதாகவும் கூறினர். முதியவர்களை நம்ப வைக்க தங்களது கூட்டத்தை சேர்ந்த ஒருவர் மூலம் முதியவரிடம் போன் மூலம் பேச வைப்பது வழக்கம். போனில் பேசும் நபர் வேறு மருத்துமனையில் ரூ. 15 லட்சம் செலவு செய்து தனது தாயாருக்கு சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என்றும், ஆனால் டாக்டர் திவான் மூலம் குணமடைந்ததாக கூறுவார். அவர்களின் பேச்சை நம்பி அவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதாக முதியவர் தெரிவித்தவுடன் அவர்களது வீட்டிற்கு அக்கும்பல் செல்வது வழக்கம்.
போலி டாக்டரும் அவரது உதவியாளர் தன்ராஜ் பாட்டீல் என்பவரும் சேர்ந்து ஒரு போலியான சிகிச்சையை செய்வார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஊசிகளைச் செருகி கை சாமர்த்தியம் மூலம் கருப்பு இரத்தம் கட்டிகளை எடுப்பார்கள். அந்த கருப்பு ரத்த கட்டிகள்தான் அவர்களின் நோய்க்குக் காரணம் என்றும், கருப்பு ரத்தத்தின் ஒவ்வொரு துளியை எடுக்க 7,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறினார்கள். முதல் நாளில் 85 வயது முதியவரிடமிருந்து 4 லட்சத்தை வாங்கிக்கொண்டனர்.
அப்படி இருந்தும் இன்னும் சிகிச்சை தேவைப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து முதியவர் வங்கியில் தனது பெயரில் இருந்த வைப்பு தொகையை பாதியிலேயே எடுத்து அதிலிருந்து ரூ.2.7 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். பணத்தை வாங்குவதற்காக அக்கும்பலை சேர்ந்த ஒருவர் வங்கிக்கே சென்றார். முதியவர் அடிக்கடி வைப்பு தொகையில் இருந்து பணம் எடுப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரி, முதியவரை யாராவது டிஜிட்டல் முறையில் கைது செய்திருக்கலாம் என்று கருதி இது குறித்து சைபர் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீஸார் வந்து விசாரித்தபோதுதான் உண்மை நிலவரம் தெரிய வந்தது. இம்மோசடி தொடர்பாக மொகமத் அம்ஜத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.6.7 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து சைபர் பிரிவு போலீஸ் அதிகாரி ஹர்திக் மகாடியா கூறுகையில், ''மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் மதக் கூட்டங்கள் (சத்சங்கங்கள்) ஆகியவற்றில் வயதானவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு உதவுவது போன்று நடிப்பார்கள், முதியவர்களிடம் இருக்கும் மூட்டு வலி பிரச்னைக்கு தங்களால் டாக்டர் திவான் மூலம் தீர்வு காண முடியும் என்றும், வீட்டிற்கே வந்து சிகிச்சை கொடுப்போம்" என்று தெரிவிப்பார்கள்.
அவர்களின் பேச்சை நம்புபவர்களிடம் கருப்பு ரத்தக்கட்டிகளை எடுப்பதாக கூறி பணத்தை மோசடி செய்து வந்தனர். இதில் கைது செய்யப்பட்ட நபர் ராஜஸ்தானை சேர்ந்தவர். 6 ஆம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தியவர். அவரது கூட்டாளிகளான முகமது ஆர்யன், முகமது ஷெரு என்ற நோமன் மற்றும் ராஜஸ்தானில் வசிக்கும் முகமது சமீர் ஆகிய மூவரை தேடி வருகிறோம். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது'' என்றார்.
















