"நிறைய பேர் ரீலிஸ் போடுறாங்க, ஏன் உங்களை கூப்பிட்டேன் தெரியுமா?- சிறுவர்களை பாரா...
கனிமொழி கையிலெடுத்த `விவகாரம்' சக்சஸ்: `இனிமேல் எல்லாம் அக்கா தான்' - உற்சாக கனி டீம்! பின்னணி என்ன?
திமுக-வில் நடந்த மாற்றம்!
சமீபத்தில் திமுக மாணவரணிச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்திக்கு பதிலாக, திமுக மாணவர் அணி துணைச் செயலாளராக இருந்துவரும் ஜெ. வீரமணி என்ற பெண்மணியை மாணவரணிச் செயலாளராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது திமுக தலைமை.
மேலும், ஒரு அணியின் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தியை கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமித்திருக்கிறார்கள். இதனை அவருக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவின் முக்கியமான அணியின் செயலாளர், அதுவும் உதயநிதி, அன்பில் மகேஸ் உள்ளிட்ட மேல்மட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் கருதப்படும் ராஜீவ் காந்தி மாற்றப்பட்டிருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. கூடவே இந்த மாற்றத்தின் பின்னணியில் துணை பொதுச் செயலாளரும், முதல்வரின் சகோதரியுமான கனிமொழி கருணாநிதியின் கை ஓங்கியிருப்பதாகச் சொல்கிறது அறிவாலய வட்டாரம்.
முதல்வரிடம் பேசிய கனிமொழி!
ராஜீவ் மாற்றத்துக்குப் பின்னணியில் கனிமொழி இருப்பதாகச் சொல்லப்படுவது குறித்து விவரமறிந்த வட்டாரத்தில் பேசினோம். "திருச்சி மாநாட்டுக்கு முன்பாகவே இந்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. கனிமொழியைச் சந்தித்த மாணவரணி நிர்வாகிகள் சிலர் ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகள் குறித்து கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்கள். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கனிமொழி இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். கூடவே திருச்சி மாநாடு முடிந்ததும் இந்த விவகாரம் குறித்து மீண்டும் முதல்வரிடம் பேசியிருக்கிறார்.

கனிமொழியின் தொடர்ச்சியான கோரிக்கையினால் செயலாளர் நடவடிக்கை குறித்து உளவுத்துறையிடம் விரிவான அறிக்கையைக் கேட்டிருக்கிறார் முதல்வர். அந்த அறிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதல்வர் விவகாரத்தை உதயநிதியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அறிக்கையைப் பார்த்து உதயநிதிக்கும் படு ஷாக் தான்.
எல்லாம் ஒன்று சேர்ந்த நிலையில் செயலாளரை மாற்றுவது தவிர வேறெந்த வழியிலும் இல்லை என்ற நிலையில் ராஜீவை மாற்றி, இந்த புகார்களைக் கனிமொழியின் கவனத்துக்குக் கொண்டு சென்ற வீரமணியைச் செயலாளராக அறிவித்திருக்கிறது தலைமை" என்றார்கள்.
சந்தோஷத்தில் கனி, வருத்தத்தில் ஆ.ராசா!
இந்த அறிவிப்பு குறித்து அறிவாலய வட்டாரத்தில் கேட்டபோது, "மாணவரணியின் பொறுப்பாளரான துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா ஏற்கனவே ராஜீவ் காந்தி செயல்பாடுகள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார். கூடவே அணிக்கு புதிய செயலாளர் நியமனத்துக்கு அவர் வேறொரு நபரைப் பரிந்துரை செய்திருந்தார்.
இந்த சூழலில் ஆள் மாறியிருப்பதில் ராசா தரப்பு வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில், கனிமொழி மண்டல பொறுப்பாளராக இருக்கும் தொகுதிகளில் வேட்பாளர் தேர்வினை அவரே முடிவுசெய்யட்டும் என்று முதல்வர் சொல்லியிருந்தார்.

ஏற்கனவே கனிமொழி பரிந்துரையில் சிலருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது தொடங்கி இப்போது அவர் சொன்ன நபரை முக்கிய அணியின் செயலாளராக நியமித்தது வரை கனிமொழியின் கோரிக்கைகளைத் தொடர்ச்சியாகத் தட்டாமல் செய்து கொடுக்கிறார் தலைவர். இதனால், கட்சியின் கனி அக்காவின் கை ஓங்கியிருப்பதாக 'இனி நாங்க தான்' என்று சொல்லி ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறது கனிமொழி தரப்பு. அதே நேரத்தில் மாநில அரசியலில் அவர் அதீத ஆர்வம் காட்டுவதாக அவர் தரப்பு செய்திகளைக் கிளப்பிவிட்ட நிலையில் அவரை சரிக்கட்டப் பார்க்கிறதா தலைமை என்ற விவாதமும் இருக்கத்தான் செய்கிறது" என்றார்கள் விளக்கமாக.















