கொரோனாவுக்கே tough கொடுக்கும் எபோலா... பீதியில் உலக நாடுகள்! இன்னொரு ரவுண்டை இந்...
காத்திருந்த 42 மணமகன்கள்: திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட 'திருமண மோசடி' - ஊரையே அதிரவைத்த சம்பவம்!
மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 24) ஒரே மேடையில் 42 பேருக்கு திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த திருமண விழாவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் மணமகன்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் இடைத்தரகர்கள் ‘கூட்டுத் திருமண விழா’ ஏற்பாட்டிற்காக ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை வசூலித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, மணமகன்களின் மொபைல் போன்களுக்குப் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அவர்கள் அனைவரும் ஏழை அல்லது ஆதரவற்ற பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்றும், உடனடியாகத் திருமணம் செய்யச் சம்மதிப்பதாகவும் இடைத்தரகர்கள் நம்ப வைத்துள்ளனர்.

இதை நம்பி பணம் கட்டிய தேவாஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் இருந்து தங்களுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் ஆண்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இந்தத் திருமண விழாவிற்காகப் பல குடும்பங்கள் கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டும், ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தும் வந்திருந்தனர். ஆனால், மாலை நேரமாகியும் மணமகள்கள் யாரும் திருமண விழா மேடைக்கு வரவில்லை. அதனால், திருமண மைதானமே கோபமும் அதிர்ச்சியும் நிறைந்த போர்க்களமாக மாறியது.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்த பாதிக்கப்பட்ட ஹர்னியாகலன் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்பவர், ``எங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 25,000 பதிவுக்கட்டணமாகப் பெற்றனர். மணப்பெண்கள் அனைவரும் இந்தூரின் 'மாத்ரு சாயா ஆசிரமத்தைச்' சேர்ந்தவர்கள் என்று கூறினர். நாங்கள் பெண்களின் புகைப்படங்களைக் கேட்டபோது, சமூக வலைதளங்களில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட மாடல்களின் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். திருமணத்திற்கு முந்தைய நாளே எங்களைத் தேவாஸ் பகுதிக்கு வருமாறு கூறினர். மறுநாள் காலையில் கூட்டுத் திருமணம் நடக்கும் என்றும், வரதட்சணைப் பொருட்களும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். ஆனால், நாங்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றபோது அங்கு யாருமே இல்லை. சிறிது நேரத்தில் அவர்களின் போன்களும் அணைக்கப்பட்டுவிட்டன," என்று தெரிவித்தார்.
மோசடி கும்பலின் திட்டமிட்ட சதி குறித்து அசோக் என்ற மணமகன் கூறுகையில், ``மணமகன்களுக்கான ஆடைகள் மற்றும் திருமணச் சடங்குகள் அனைத்தும் விழா மேடையிலேயே ஏற்பாடு செய்யப்படும் என்பதால், எங்களை சாதாரண உடையில் வருமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், திருமணத்திற்கு முந்தைய பாரம்பரிய சடங்குகளான 'ஹல்டி' அல்லது 'மெஹந்தி' போன்றவற்றை வீடுகளில் வைத்து செய்ய வேண்டாம் என்றும், அந்தச் சடங்குகள் அனைத்தும் நேரடியாகத் திருமண மேடையிலேயே நடத்தப்படும் என்றும் நம்ப வைத்தார்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மணமகன் ஒருவரின் சகோதரியான ராஜ்குமாரி பேசுகையில், "என் சகோதரனின் திருமணத்திற்காக அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் சமர்ப்பித்திருந்தோம். நாங்கள் விழா இடத்திற்கு வந்த பிறகு, மணப்பெண்களுடன் 'மேடம்' வந்து கொண்டிருக்கிறார் என்று தொடர்ந்து பொய் கூறிக்கொண்டே இருந்தனர். ஆனால் நள்ளிரவு வரை யாரும் வரவில்லை. இதனால் எங்கள் உறவினர்கள் முன்னிலையில் நாங்கள் அவமானப்பட்டு நிற்கிறோம்," என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இதுகுறித்து தேவாஸ் பேங்க் நோட் பிரஸ் (BNP) காவல் நிலையப் பொறுப்பாளர் பிரீத்தி கடாரே கூறுகையில், "பல இளைஞர்களிடமிருந்து எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன. இந்த வழக்கை மிகவும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு தேடி வருகிறோம்.

மேலும், இந்த மோசடிக்குச் சம்பந்தப்பட்ட ஆதரவற்றோர் இல்லத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில், இது திருமணத்தின் பெயரால் நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கூட்டு மோசடி என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான முகேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளோம். அவர்களின் முழுமையான மோசடி பின்னணி குறித்துத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அங்குள்ள அவர்களின் பின்னணியை ஆராய காவல்துறையின் தனிப்படை ஒன்று விரைந்துள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


















