'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?
கேரளம்: "அந்த அழைப்புக்காகத்தான் நான் காத்திருந்தேன்" - அமைச்சர் மீது புகார் கூறிய மனைவி சமரசமானார்
கேரள மாநில சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் மீது அவரது மனைவி பிந்து மேனன் நேற்று சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
வாலகத்தில் உள்ள குடும்ப வீட்டுக்குக் கடந்த 7-ம் தேதி சென்றபோது அங்கு கே.பி. கணேஷ் குமாரை மற்றொரு பெண்ணுடன் யாரும் பார்க்கக்கூடாத மோசமான நிலையில் பார்த்ததாகவும், அதைத் தனது செல்போனில் போட்டோ எடுத்தபோது அவரது ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தும் விதமாகக் கதவை அடைக்க முயன்றதாகவும், மற்றொருவர் செல்போனைப் பறிக்க முயன்றதாகவும் கூறியிருந்தார்.
கே.பி. கணேஷ் குமாரின் டிரைவர் அந்தப் பெண்ணை அங்கிருந்து காரில் அழைத்துச் சென்றுவிட்டதாகவும், அங்கிருந்தபடியே உறவினரான முன்னாள் டி.ஜி.பி-யான ஸ்ரீலேகாவை அழைத்து, அவரது ஆலோசனைப்படி காவல்துறையின் 112 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், போலீஸார் அங்கு சென்றபோது கே.பி. கணேஷ் குமாரின் ஊழியர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இது குடும்பப் பிரச்னை என்பதால் அதில் தலையிட முடியாது எனக் கூறி போலீஸார் சென்றுவிட்டதாகவும் பிந்து மேனன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுபற்றிக் கருத்து தெரிவித்த அமைச்சர் கே.பி. கணேஷ் குமார், "எனது அரசியலைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதி மக்களுக்கு என்னவெல்லாம் செய்கிறார், அதனால் கேரளாவுக்கு என்ன நன்மை நடந்தது என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும்.
கணேஷ் குமாருக்கு ஒன்றல்ல ஐந்தாயிரம் காதல் உண்டு. காதல் இல்லாதவன் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன். எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்" எனக் கூறியிருந்தார்.
இதற்கிடையே கணவருடன் சமாதானமாகச் செல்வதாகக் கூறிப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிந்து மேனன்.
இதுகுறித்து பிந்து மேனன் கூறுகையில், "செவ்வாய்க்கிழமை காலை கணேஷ் குமார் என்னை அழைத்திருந்தார். இது குடும்பப் பிரச்னை என்றும், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கணேஷ் குமாரைத் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. அவரை மிகவும் நேசிக்கிறேன். கணேஷ் குமார் தனக்கு ஐந்தாயிரம் காதல்கள் இருப்பதாகக் கூறியது மிகவும் வேதனை அளித்தது.

கணேஷ் குமார் முதலில் எனது சகோதரிக்கு போன் செய்தார். பின்னர் நேரடியாக என்னிடம் பேசி மன்னிப்புக் கேட்டார். அந்த ஒரு தொலைபேசி அழைப்புக்காகத்தான் நான் காத்திருந்தேன். இதற்கு முன்பு எங்களுக்கு இடையே பிரச்னைகள் இருந்தபோதிலும், நான் ஒருபோதும் ஊடகங்களில் பேசியதில்லை.
இப்போது நான் செய்தது தவறு என்று எனது தோழிகள் கூடச் சொன்னார்கள். கணேஷ் குமார் மீது புகார் அளிக்கமாட்டேன். அவரைப் பழிவாங்கும் வகையில் நான் செயல்படமாட்டேன். அவருடன் வாழ வேண்டியவர் நான் என்பதால் கணேஷ் குமார் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவையில்லை. இது குறித்து சமூக ஊடகங்களில் எந்த விவாதமும் நடத்த வேண்டாம்" என்றார்.















