'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?
"இறுதிச்சடங்கு செய்ய இருந்தேன்" - குண்டும் குழியுமான சாலையால் மூளைச்சாவு அடைந்த பெண் பிழைத்த வினோதம்
உத்தரப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் அதிர்ஷ்டவசமாக குண்டும் குழியுமான சாலைகளால் உயிர் பிழைத்துள்ளார்.
அங்குள்ள ரேபரேலி கோர்ட்டில் பணியாற்றி வருபவர் வினீதா (50). இவர் கடந்த மாதம் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரது கணவர் குல்தீப் தனது மனைவியை ரேபரேலியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்குள்ள டாக்டர்கள் வினீதாவிற்கு இரண்டு நாள்கள் சிகிச்சையளித்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் மேற்கொண்டு சிகிச்சை கொடுத்து எந்தவித பயனும் இல்லை என்றும் தெரிவித்தனர். இதனால் வினீதாவை அவரது கணவர் குல்தீப் ஆம்புலன்ஸ் ஒன்றில் தனது வீட்டிற்குக் கொண்டு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் சாலை கடுமையான குண்டும் குழியுமாகக் காணப்பட்டது.
அது போன்ற ஒரு குழியில் ஆம்புலன்ஸ் மோதியது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சுவாசிக்காமல் இருந்த வினிதா திடீரென வழக்கமாகச் சுவாசிக்க ஆரம்பித்துவிட்டார். இதனைக் கவனித்த குல்தீப் இம்முறை தனது மனைவியை பிலிபிட் நகரில் உள்ள நியூரோசிட்டி மருத்துவமனையில் சேர்த்தார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை கொடுத்தனர். இப்போது வினீதாவிற்குச் சுயநினைவு திரும்பி இருக்கிறது. அவர் அனைவரிடமும் அன்பாகப் பேச ஆரம்பித்துவிட்டார். 10 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பி இருக்கிறார்.
இது குறித்து வினீதாவின் கணவர் குல்தீப் கூறுகையில், ''எனது மனைவிக்குச் சுயநினைவு வர வாய்ப்பு இல்லை என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதயத் துடிப்பு மட்டும் இருந்தது. எனவே அவரை ஆம்புலன்ஸில் வீட்டிற்குக் கொண்டு சென்று கொண்டிருந்தேன்.
அப்போது இறுதிச்சடங்குகளுக்குத் தயாராகும்படி என் குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். ஆம்புலன்ஸ் ஹபீஸ்கஞ்சை அடைந்ததும், அது சாலையில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் மோதியது.
அப்போது ஒரு அதிசயம் நடந்தது. என் மனைவி மீண்டும் சாதாரணமாகச் சுவாசிக்கத் தொடங்கினாள். உடனே இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை நிறுத்துமாறு உடனடியாக என் குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். உடனே பிலிபிட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். இப்போது எங்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் மரணத்தை வென்றுவிட்டார்'' என்று அவர் கூறினார்.
அவருக்குச் சிகிச்சையளித்த நியூரோசிட்டி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராகேஷ் சிங் இது குறித்து கூறுகையில், ''நோயாளியின் உடல் நிலை மற்றும் மருத்துவ நோயறிதல் குறித்து அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த பரேலி மருத்துவமனையில் உள்ள டாக்டர்களிடம் முழுமையான தகவல்களைக் கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் அவருக்குச் சிகிச்சையைத் தொடங்கினேன்.

பரேலி மருத்துவத் தகவல்களின் அடிப்படையில் வினீதாவின் மூளைத் தண்டு செயல்பாடு இல்லாமல் இருந்து. அதே நேரத்தில் அவரது கிளாஸ்கோ கோமா அளவுகோல் சாதாரண அளவிலான 15 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது மூன்று புள்ளிகளாகக் குறைந்து காணப்பட்டது. அவரது கண்களைப் பரிசோதித்ததில், மைட்ரியாசிஸ் இருப்பது தெரியவந்தது.
இது அவரது மூளை இறந்து போவதையும், தொடர்ந்து உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் குறைந்து வருவதையும் குறிக்கிறது. இதையடுத்து தொடர்ச்சியான விரைவான மருத்துவப் பரிசோதனைகளின்போது, அவரது ரத்த ஓட்டத்திலும் நிணநீர் மண்டலத்திலும் அதிக நியூரோடாக்சின்கள் கண்டறியப்பட்டன. அதற்கு சிகிச்சையளித்ததன் மூலம் அவர் விரைவாகக் குணமடைந்தார்'' என்று கூறினார்.




















