தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி ...
கோயிலில் விடப்பட்ட மூதாட்டி; பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க உதவிய டிஎஸ்பி; பொன்னமராவதியில் நெகிழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அழகியநாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பித்தளைப் பாத்திரம், பழைய இரும்புப் பெட்டி, சேலையுடன் மூதாட்டி ஒருவர் கொண்டுவந்து விடப்பட்டார்.
உணவின்றி கடும் குளிரில் வாடிய அந்த மூதாட்டியைப் பார்த்த குருக்கள் சரவணன், அவருக்கு உணவு கொடுத்து, அவரின் நிலை குறித்து கேட்டறிந்தார். அதோடு, இந்த மூதாட்டி குறித்து பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த பொன்னமராவதி டி.எஸ்.பி தங்கராமன் அறிவுறுத்தலின்படி அழகியநாட்சி அம்மன் கோயில் வளாக பகுதிக்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் பத்மா, மூதாட்டியை விசாரித்தபோது மூதாட்டி பெயர் பொட்டையம்மாள், மேலூர் அருகில் உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்த பாக்கியம் என்பவரின் மனைவி என்பது தெரியவந்தது.
அதோடு, தன்னை ஆட்டோவில் அழைத்து வந்து இந்தப் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றதாகவும் மூதாட்டி கண்ணீரோடு கூறினார்.
மூதாட்டியின் பாதுகாப்பற்ற நிலையை டி.எஸ்.பி தங்கராமனிடம் தெரிவித்த காவல் ஆய்வாளர் பத்மா, டி.எஸ்.பி. தங்கராமன் அறிவுறுத்தலின்படி அறந்தாங்கி குரும்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் 'புதிய நமது இல்லம் அறக்கட்டளை' தொண்டு நிறுவனத் தலைமை சேவகர் சந்திரசேகரன் என்பவரைத் தொடர்பு கொண்டு காவல்துறை சார்பில் மீட்கப்பட்ட மூதாட்டியை பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் காவலர் பாண்டியன் மற்றும் பொன்னமராவதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், காமராஜ் நகர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் நிர்வாகியுமான இரா.பாஸ்கர் இந்தியன் ஆகியோர் அறந்தாங்கி குரும்பூரில் உள்ள 'புதிய நமது இல்லத்தில்' பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்த்தனர்.
மேலும், நான்கு நாட்களாகப் பரிதவித்து வந்த மூதாட்டியை மீட்டுப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்த பொன்னமராவதி டி.எஸ்.பி தங்கராமன் தலைமையிலான காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


















