CWG: காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து தங்கம்; சாதனை படைத்த ப்ரீத்தி பவார், ஜா...
கோவை எண்ணெய் குழாய்: ``போராடும் விவசாயிகளைக் கைது செய்வதா?" - தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை 340 கிமீ தொலைவுக்கு பூமிக்கடியில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – காவல்துறையின் உதவியோடு விளைநிலங்களைப் பறிக்கும் தவெக அரசின் விவசாய விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் கோவையிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை 340 கி.மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரின் மூலம் வலுக்கட்டாயமாகக் கைது செய்த தவெக அரசின் அதிகாரப்போக்குக் கடும் கண்டனத்திற்குரியது.
விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் அமைக்கப்படுவதால், நிலத்தின் பயன்பாடு, நிலத்தடி நீர், விவசாய உற்பத்தி எனப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற விவசாயிகளின் குரலுக்குச் செவிசாய்க்க மறுத்து, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க தவெக அரசு கையாண்டிருக்கும் அடக்குமுறை, ஆணவம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும்.

கடந்த ஆட்சிக்காலங்களில் இதே திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போரட்டங்களின் விளைவாக எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், காவல்துறை உதவியுடன் விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிக்க முற்படுவது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தவெக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
எனவே, வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையின் படி சாலையோரமாகவோ அல்லது நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ எண்ணெய் குழாய்களைப் பதிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.











