சென்னை புத்தக கண்காட்சியில் ஒரே இடத்தில் ஆதார், தபால், மை ஸ்டாம்ப் சேவைகள்! - சூப்பர் வரவேற்பு!
இன்று வங்கி கணக்கு தொடங்குவதிலிருந்து பலதரப்பட்ட பொது மக்கள் சேவைகள் வரை, ஆதார் அடையாள எண் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது.
இந்நிலையில், ஆதார் விண்ணப்பிக்கவும், அதிலுள்ள தகவல்களை மாற்றம் செய்யவும் பலருக்கு நேரம் இருப்பதில்லை; எங்கே சென்று எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதும் பலருக்கு தெரியவில்லை. இதற்காகவே, மக்கள் அதிகமாகக் குவியும் சென்னை 49ஆவது புத்தகக் கண்காட்சியில் இந்திய தபால் துறை சார்பில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஆதார் சேவைகள் மட்டுமல்லாமல், போஸ்ட் சேவைகள், மை ஸ்டாம்ப் சேவைகள் என பல்வேறு சேவைகள் அங்கு வழங்கப்படுகின்றன. அங்கிருந்த அரசு ஊழியர் ராம்குமாரிடம் இதுகுறித்து கேட்டோம்.

ஆதார் டு போஸ்ட்டல்!
“இங்கு ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம். குழந்தைகளுக்கு புதிய ஆதார் விண்ணப்பிப்பது முதல், ஆதாரில் மொபைல் எண், புகைப்படம், முகவரி, இனிஷியல் மாற்றம் போன்ற சேவைகளையும் இங்கேயே செய்து தருகிறோம்.
இது மட்டுமல்லாமல், புத்தகக் கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களை பார்சல், ஸ்பீட் போஸ்ட் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கும் வசதியும் இந்த அரங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னைக்குள்ளாகவே என்றால் 48 மணி நேரத்திற்குள் சென்று சேர்ந்துவிடும்.
24 மணி நேர போஸ்ட், 48 மணி நேர போஸ்ட் போன்ற வசதிகளும் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன. மேலும், போஸ்ட் ஆஃபீஸ் கணக்குகள் தொடங்கும் வசதியும் உள்ளது. சுகன்யா சம்ரிதி கணக்கு, சேமிப்பு கணக்கு போன்றவற்றை இங்கேயே தொடங்கிக் கொள்ளலாம்.

மேலும் ‘மை ஸ்டாம்ப்’ என்றொரு வசதியும் உள்ளது. பொதுவாக தலைவர்களின் புகைப்படங்களுடன் வெளிவரும் ஸ்டாம்புகளை, நமது புகைப்படத்துடன் வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு ஸ்டாம்பின் விலை 5 ரூபாய்.
இந்த ஸ்டாம்புகளை போஸ்ட் அனுப்பவும் பயன்படுத்தலாம். ஒரு ஸ்டாம்ப் கார்டின் விலை 300 ரூபாய். புகைப்படம் கொடுத்து படிவத்தை பூர்த்தி செய்தால், ஒரு மணி நேரத்திற்குள் நமது புகைப்படத்துடன் கூடிய ஸ்டாம்ப் கிடைத்துவிடும். இந்த வசதி இங்கு மட்டுமல்லாமல், செயின்ட் தாமஸ், அண்ணா நகர், தி.நகர் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும் உள்ளது,” என்றார்.
அங்கிருந்த பொதுமக்களிடம் இச்சேவை குறித்து கேட்டதில், “நீண்ட நாட்களாக ஆதாரில் மாற்றம் செய்ய அலைந்துகொண்டிருந்தோம். எங்கு செல்ல வேண்டும் என்றே தெரியாமல் இருந்தது. மற்ற இடங்களில் காலை நேரங்களில் மட்டுமே இச்சேவை கிடைக்கும்.
இங்கு புத்தகக் கண்காட்சி தொடங்கியதிலிருந்து முடியும் வரை இச்சேவை வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்க வந்த இடத்தில் இந்த வேலையும் முடிந்ததில் மகிழ்ச்சி,” என்றார் வாசகர் புவனா.

வாசகர் செந்தில்குமார் கூறுகையில், “நாங்கள் வேலைக்குச் செல்லும் நபர்கள். வேலை நாட்களில் ஆதாரில் மாற்றங்கள் செய்ய தனியாக நேரம் ஒதுக்க முடியாது. இங்கு தபால் துறை வழங்கும் வசதிகளால் எளிதாக இந்த வேலை முடிந்துவிட்டது. இது ஒரு விழிப்புணர்வாகவும் இருக்கும்,” என்றார்.





















