ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திம...
சொல்லியடித்த சுவேந்து; சறுக்கிய மம்தா - மேற்கு வங்கத்தில் பாஜக முந்தியது எப்படி?
மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. காலையில் இருந்தே பா.ஜ.கவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தது. ஆனால் பா.ஜ.கவின் எதிர்க்கட்சி தலைவர் சுவந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
அதோடு மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட பாபானிபூர் தொகுதியிலும் சுவந்து அதிகாரி முன்னிலை பெற்றார். கொல்கத்தா மாவட்டத்தில் அமைந்துள்ள பாபானிபூர் தொகுதி 2011 ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் கோட்டையாக இருந்து வருகிறது. அதில் சுப்ரதா பக்ஷி வெற்றி பெற்றார். வாக்குகள் எண்ணப்பட்டதில் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் 100 தொகுதிகள் வரை சமமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு நிலைமை தலைகீழாக மாறத்தொடங்கியது.
இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 80 முதல் 100 இடங்களை தாண்டாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. ஆனால் பா.ஜ.க-வின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது.

மதியம் 12 மணி நிலவரப்படி பா.ஜ.கவின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்தது. இதன் மூலம் ஆட்சியமைக்க தேவையான 148 இடங்களை கடந்து அறுதிப்பெரும்பான்மை இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. தங்களது கட்சி எப்படியும் ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்து இருந்தார்.
அவர் சொன்னபடி பா.ஜ.க முதன்முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த முறை 215 தொகுதியில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 100க்கும் கீழே சரிந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தனது ஆட்சியை பா.ஜ.கவிடம் பறிகொடுத்து இருக்கிறது. அதற்கு முன்பு இடது சாரி கட்சிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல் முறையாக 2011ம் ஆண்டு முதல்வரானார். இப்போது மம்தா பானர்ஜியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கம் பா.ஜ.கவிடம் சென்று இருக்கிறது.
அதுவும் மம்தாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்த சுவந்து அதிகாரி மூலம் பா.ஜ.கவிடம் சென்றுள்ளது.
மிகவும் போராட்டம் குணம் மிக்க மம்தா பானர்ஜி தனது கல்லூரி காலத்திலேயே காங்கிரஸ் கட்சி சார்பாக நடந்த போராட்டங்களில் மிகவும் ஆக்ரோஷத்துடன் கலந்து கொண்டிருக்கிறார். 1975ம் ஆண்டு இந்தியாவில் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிமுகம் செய்தபோது கொல்கத்தாவில் ஜெய்பிரகாஷ் நாராயணன் கார் சாலையில் சென்றபோது அதன் முன்பகுதியில் ஒரு கல்லூரி மாணவி ஏறிக்குதித்தார். மம்தா பானர்ஜியான அந்த பெண் பிற்காலத்தில் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். பானர்ஜியின் இளமைப் பருவத்தில், கல்லூரித் தேர்தல்களில் காங்கிரஸ் மாணவர் பிரிவான சத்ர பரிஷத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அவரது தீவிர அரசியலை காங்கிரஸ் தலைமை கவனித்து அவரை 1976 இல் மகிளா காங்கிரஸின் (இந்திரா) வங்காளப் பிரிவின் பொதுச் செயலாளராக்கியது. 1984 மக்களவைத் தேர்தலில், 29 வயதான பானர்ஜி முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் ஜாதவ்பூரில் மூத்த இடதுசாரி தலைவரும், முன்னாள் மக்களவை சபாநாயகருமான மறைந்த சோம்நாத் சட்டர்ஜியை தோற்கடித்தார். 1989 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அவர் 1991 தேர்தலில் கொல்கத்தா தெற்குத் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதலமைச்சராகும் வரை இந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். தற்போது தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதல்வராக இருந்துவிட்ட மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக ஊழல் புகார்கள் பெரிய அளவில் அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக்கொடுத்தது.!

















