'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!
ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4
தமிழக அரசியலில் மறக்க முடியாத தலைவர்களுள் ஒருவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணி என்று அவரது அபிமானிகளால் போற்றப்பட்ட ஜெயலலிதா மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சக அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர்.
தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மற்ற மாநில அரசியல் தலைவர்களுக்கும் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். சினிமாவிற்கு பிறகு எழுத்து, பத்திரிகை என்று இருந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதாவின் தோல்வி
அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து ஜெயலலிதா தொடர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது ஜெயலலிதாதான்.
அதிமுகவின் உச்சமாக பார்க்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வராக இருந்து போட்டியிட்ட போது கூட தோற்றுப் போயிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
தமிழக அரசியல் விசித்திரமானது. இங்கே பெரும் ஜாம்பவான்கள் கூட மக்கள் மன்றத்தில் வீழ்ந்து போயிருக்கின்றனர். ஜெயலலிதாவும் அப்படித்தான் 1996 இல் வீழ்ந்தார். ஜெயலலிதாவை வீழ்த்திய அந்த பர்கூர் மண்ணுக்கு அரசியல் வரலாற்றில் தனி இடம் உண்டு.
ஜா அணி - ஜெ அணி
1989-ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜா அணி - ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டிருந்ததால் ஜானகியே முதல்வரானார்.
இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தில் கலவரம் வெடித்ததால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி.
1989-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஜானகிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. கட்சி பிளவுப்பட்டு இருந்ததால் அந்தத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா
இருப்பினும் சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார். ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு ஜானகி விலக அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் கைக்கு வந்துவிட்டது.
1989 மார்ச் 25 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட்டை படித்தபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
அந்தக் கலவரத்தில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. தலைவிரி கோலமாக்கப்பட்டு வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத்திற்குள் முதல்வராகத் தான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டார்.
தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியலை உயிர்த்துடிப்புடன் நடத்தினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை போலவே கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
ஒரு கட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1991-ல் தமிழக சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற்றது.
அப்போது அதிமுக- காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.

முதல்வரான ஜெயலலிதா!
ராஜீவ் காந்தியின் அனுதாப அலையால் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார்.
எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அதிமுகவே இருக்காது என்று சொல்லப்பட்ட நிலையில் அதிமுகவை தனி ஆளாக நின்று ஆளுங்கட்சியாக மாற்றினார் ஜெயலலிதா.
'காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம்', 'தொட்டில் குழந்தை திட்டம்', '69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பிற்கான சட்ட போராட்டம்', 'மகளிர் காவல் நிலையம்' என பல நல்ல விஷயங்களை ஜெயலலிதா செய்திருந்தாலும் 1991-96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்களும் குற்றச்சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.
ஜெயலலிதா வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம்
ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அக்கா மகன் தான் சுதாகரன். இவரைத் தான் வளர்ப்பு மகன் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். 1995-ல் சுதாகரனின் திருமணம் நடைபெற்றது. பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பளவில் பந்தல் பணிகளும், 25,000 பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கும் அமைக்கப்பட்டன.
இந்தத் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த விருந்தினர்களுக்காகவே பிரபல ஹோட்டல்களில் மொத்தமாக அறைகள் புக் செய்யப்பட்டன. தாம்பூலப்பைகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி, வாண வேடிக்கைகள் என சென்னையே இந்தத் திருமணத்தால் பிரமாண்டமாக ஜொலித்தது.

இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்றால் அப்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட இந்த ஒரு திருமணமும் 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு கிடைத்த பலத்த அடியில் முக்கியமான பங்கை வகித்தது.
பாலியல் வழக்குகள்
1992 ஆம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என்பவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர் தம் கணவர் நந்தகோபால் முன்னாலேயே காவல்துறையினரால் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்.
பத்மினியின் கண்முன்னாலேயே நந்த கோபாலை காவல்துறையினர் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் அப்போது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

வாச்சாத்தி வன்கொடுமை
அதுமட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய மற்றொரு சம்பவம் வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை.
1992 ஜூன் 20ஆம் தேதி சந்தன மரங்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
அனைவரது வீடுகளிலும் புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஊர் நடுவே அமைந்துள்ள ஆலமரம் அடியில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து கொடூரமாக தாக்கியதாகவும், 18 பெண்களை அருகில் இருந்த வனத்துறையினர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது.
கும்பகோண மகாமக விபத்து
கும்பகோணத்தில் 1992-ம் ஆண்டு நடந்த மகாமகம் சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது. கும்பகோணத்தில் மகாமகம் நிகழ்ச்சி நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் விழா என்பதால் தமிழ்நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஆனால் இந்த விழாவில் 48 பேர் மகாமகம் குளத்தில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பலியானார்கள். அந்த நாளில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
டான்சி ஊழல் வழக்கு
1991 - 96ம் ஆண்டுக்கால ஆட்சியில், பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு, கொடநாடு எஸ்டேட் என பல புகார்கள் எழுந்தன. அதில் டான்சி ஊழல் முக்கியமானது. தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வாங்கியது `சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம். இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது.
டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கையை மக்கள் இழந்திருந்தனர். இவர் ஆட்சியில் இருந்த சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஏன்? ரஜினியே, "இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று திமுக - தாமாக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து தான், 5 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருந்த ஜெயலலிதா 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார். தமிழக அரசின் மோசமான ஆட்சிகளில் ஒன்றை கொடுத்துவிட்டு தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடத்தை கொடுத்தனர். ஜெயலலிதாவே தோற்றுப் போனார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனம் ஜெவை வீழ்த்தி வென்றார்.
ஜெயலலிதாவின் இந்த பர்கூர் தோல்வி, ஒரு வெறும் தேர்தல் முடிவு மட்டும் அல்ல. மக்கள் நம்பிக்கையின் ஆழத்தையும், அவர்கள் தீர்ப்பின் சக்தியையும் நினைவூட்டிய வரலாற்று தருணம்.!














