`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்' - விஐடி வ...
'தமிழ்நாட்டில் 7, பாஜக ரூட்டில் ஒரு ராஜ்ய சபா சீட்' - விட்டுக்கொடுத்த தினகரனுக்கு டெல்லி `பரிசு'?
'விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' எனச் சொல்லி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான கோபங்களை விட்டுக் கொடுத்து என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வை இணைத்திருக்கிறார் டிடிவி தினகரன். டெல்லியின் பேச்சுக்கு மரியாதைக்கு கொடுத்து கூட்டணிக்கு வந்ததால் அ.ம.மு.க-வுக்கு 'ராஜ்ய சபா சீட்' பரிசாக கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

நம்மிடம் பேசிய அவர்கள், "2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினார் டிடிவி தினகரன். '18 சீட் கொடுத்தால் கூட்டணிக்கு வருகிறேன்' என பா.ஜ.க தலைமைக்கு தூதுவிட்டார். பா.ஜ.க முயற்சித்தும்கூட சசிகலா, தினகரன் என யாரும் கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதிக்காட்டியது எடப்பாடி - பன்னீர் தரப்பு.
இதனால் அப்செட்டான டிடிவி தினகரன் தே.மு.தி.க உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அவரை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளாததன் விளைவாக அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரிந்து 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவியதோடு ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் இழக்கும் நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு 2026-ல் தி.மு.க-வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்தார்" என்றனர்.
கூட்டணி விவகாரங்கள் குறித்து அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்...
"2024 நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தோம். அதன்பிறகு 2025 ஏப்ரல் மாதம் அ.தி.மு.க என்.டி.ஏ-வுக்குள் வந்தவுடன் 'அ.ம.மு.க கூட்டணியில் இருக்கக்கூடாது' என கருதியது அ.தி.மு.க. எங்களுக்கான முக்கியத்துவம் குறையத்தொடங்கியதும் என்.டி.ஏ-வைவிட்டு விலகினோம். ஆனால் கடந்த மூன்றுமாதமாக எங்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியது டெல்லி. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தினகரன்.
'அ.ம.மு.க வேண்டாம்' என முன்பு முரண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக சொன்னார்கள். டெல்லியும் கூட்டணிக்கு வரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து நாங்களும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம். ஆரம்பத்தில் 18 சீட் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது.

10 சீட்டுக்கு மேல் வாய்ப்பில்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியுடன் கலந்தாலோசித்து 7 எம்.எல்.ஏ தொகுதிகளாக ஒப்பந்தமாகியிருக்கிறது. அதோடு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருந்து ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்கள்" என்றனர்.
கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கினாலும்கூட தனது சொந்த கணக்கிலிருந்து எம்.பி சீட் கொடுத்து அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் இழுத்திருக்கிறது பாஜக என்கிற தகவல் தான் தற்போது அரசியல் மட்டத்தில் ஹாட் டாப்பிக்.!


















