TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி; அவையில் அனல் பறந்த ...
தமிழ்நாட்டில் குறைந்த GST வசூல் - இதற்கு மக்களின் நுகர்வு தான் முக்கிய காரணமா?
மத்திய அரசு ஜி.எஸ்.டி வசூல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மாநில ஜி.எஸ்.டி வசூல் குறித்துத் தரவுகள் வெளியாகி உள்ளன.
அதன்படி, 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் 1 சதவிகிதம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பக்கத்து மாநிலங்களான கேரளாவும், கர்நாடகாவும் 13 சதவிகிதம் உயர்வாக ஜி.எஸ்.டி வசூல் செய்திருக்கின்றன. ஆந்திரப் பிரதேசத்தின் ஜி.எஸ்.டி வசூல் 7 சதவிகிதம் குறைந்துள்ளது.
‘தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் 1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது’ தற்போது பேசுபொருளாகி உள்ளது.

‘ஏன் இந்தக் குறைவு?’ என்கிற கேள்வியைப் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.
“ஜி.எஸ்.டி வசூல் என்பது மக்களின் நுகர்வு மூலம் கிடைப்பதாகும். அதாவது மக்கள் ஏதேனும் ஒரு பொருளை வாங்கும்போது, அதில் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்.
இதன் மூலம் அரசிற்கு வருவாய் வரும். இப்போதைக்குத் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி எதனால் குறைந்திருக்கிறது என்கிற தெளிவான அறிக்கை எதுவும் இல்லை.
இதனால், பொதுவாகப் பார்க்கும்போது, கடந்த மாதம், மக்களின் நுகர்வு குறைவாக இருந்திருக்கலாம்.
நுகர்வு என்பது கடைக்குச் சென்று மளிகைப் பொருள்களை வாங்குவது... துணிகள் வாங்குவது மட்டுமல்ல. ரியல் எஸ்டேட் வாங்குவது போன்றவையும் ஆகும்.
சின்னச் சின்னப் பொருள்களை விட, ரியல் எஸ்டேட் மாதிரியான பெரிய விஷயங்களுக்குச் செலவு செய்யும்போது, ஜி.எஸ்.டி வசூல் இன்னும் அதிகமாகும். இது தற்போது குறைந்திருக்கலாம்.
மக்களின் நுகர்வு குறைவாக இருக்கிறது என்பதற்கு இன்னொரு சான்று, தற்போது இந்தியாவிலேயே அதிக தங்க நகைக்கடன் வாங்கும் டாப் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் போனதால்தான், மக்கள் நகைக்கடன் என்கிற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஜி.எஸ்.டி வசூல் 1 சதவிகிதக் குறைவு என்பது பெரிதாகக் கவலைப்படுவதற்குரியது அல்ல. ஆனால், கவனிக்க வேண்டும்.
காரணம், 1 சதவிகிதம் என்பது மிகவும் குறைந்த எண்ணிக்கையே. இது பெருமளவில் எந்தவொரு பாதிப்பையும் பெரிதாக இப்போதைக்குத் தராது.
ஆனால், இது தொடர்ந்தால், மாநிலத்தில் வருவாய் பெருமளவு அடிப்படும்” என்று விளக்கினார்.















