ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? - 'கோம் நகரில் தீவிர சிகிச்சை?' -...
தாய்லாந்துக்குப் போக இது கட்டாயமா? - சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு
தாய்லாந்து ஒரு உலகளாவிய சுற்றுலாத் தலமாக இருந்தாலும், சமீபகாலமாக அந்நாட்டு அரசு ஒரு பெரிய பொருளாதாரச் சவாலை எதிர்கொண்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் விபத்துகளில் சிக்கினாலோ அல்லது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், பல சுற்றுலாப் பயணிகளிடம் மருத்துவக் காப்பீடு இல்லாததாலும், சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்தப் போதிய பணம் இல்லாததாலும், அந்தச் செலவை தாய்லாந்து அரசாங்கமே ஏற்க வேண்டியுள்ளது.

தாய்லாந்து பொதுச் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, வெளிநாட்டுப் பயணிகளால் செலுத்தப்படாத மருத்துவக் கட்டணங்களின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் பாட் (Baht) வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக புக்கெட் (Phuket) மற்றும் சியாங் மாய் (Chiang Mai) போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
புதிய விதிமுறையின் முக்கிய அம்சங்கள்:
சுற்றுலாப் பயணிகள் விபத்து அல்லது நோயால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கான சிகிச்சையை தடையின்றி வழங்குவதையும், மருத்துவமனைகளுக்குச் சேர வேண்டிய கட்டணம் சரியாகச் சேர்வதையும் உறுதி செய்ய இந்தக் காப்பீடு உதவும்.
அரசு இன்னும் அதிகாரபூர்வமாக குறைந்தபட்சத் தொகையை அறிவிக்கவில்லை என்றாலும், முன்பு கோவிட் காலத்தில் இருந்தது போல சுமார் 10,000 முதல் 50,000 அமெரிக்க டாலர்கள் வரையிலான மருத்துவச் செலவுகளை ஈடுகட்டும் காப்பீடு தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வான்வழியாக வரும் பயணிகளுக்கு 300 பாட் (855 ரூபாய்) நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஏற்கெனவே பரிசீலனையில் உள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக அல்லது அதனுடன் சேர்த்து, நேரடியாகக் காப்பீட்டை மட்டும் கட்டாயமாக்குவது அதிக பலன் தரும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் `தாய்லாந்து டிஜிட்டல் அரைவல் கார்டு' (TDAC) மூலம் விண்ணப்பிக்கும்போது, அங்கேயே காப்பீட்டுத் தகவல்களையும் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையில், அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் இது 100% சட்டபூர்வமாகக் கட்டாயமாக்கப்படவில்லை (சில நீண்ட கால விசாக்கள் தவிர). இருப்பினும், பின்வரும் காரணங்களுக்காக இப்போதே காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது.
தாய்லாந்தில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் விபத்துகளைச் சந்திக்கின்றனர். காப்பீடு இருந்தால் பெரிய மருத்துவச் செலவுகளில் இருந்து தப்பிக்கலாம். தாய்லாந்து அரசு தற்போது அனைத்துப் பயணிகளையும் தானாக முன்வந்து காப்பீடு எடுத்துக்கொள்ளுமாறு வலுவாகப் பரிந்துரைக்கிறது.

பயணக் காப்பீடு என்பது மருத்துவச் செலவுகள் மட்டுமல்லாமல், விமானத் தாமதம் அல்லது உடைமைகள் தொலைந்து போவது போன்ற சிக்கல்களையும் ஈடுகட்டும். தாய்லாந்து அரசு பொது சுகாதாரச் சுமையைக் குறைக்க இந்தக் கொள்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது. எனவே, தாய்லாந்து செல்லும் இந்தியப் பயணிகள் அல்லது மற்ற நாட்டுப் பயணிகள் ஒரு விரிவான 'Travel Insurance' எடுத்துச் செல்வது பாதுகாப்பானது மற்றும் அவசியமானது.













.jpg)






