ஓபிஎஸ்: `ஆதரவாளர்கள் கொடுத்த ட்விஸ்ட்!' - தேனியை விட்டுவிட்டு மதுரையில் இணைப்பு ...
திருச்சி: நாதஸ்வர மேதை ஷேக் மெகபூப் சுபானி மறைவு - சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நாதஸ்வர மேதை ஷேக் மெகபூப் சுபானி, தனது குடும்பத்தின் 8-வது தலைமுறை நாதஸ்வரக் கலைஞராக பரிமளித்து வந்தார். தனது தந்தை ஷேக் மீரா சாகிப்பிடம் இசை பயின்றவர். பின்னர், உலகப்புகழ் பெற்ற டாக்டர் ஷேக் சின்னா மௌலானா சாகிப்பிடம் 15 ஆண்டுகள் தஞ்சாவூர் பாணியிலான கடினமான இசைப் பயிற்சியைப் பெற்று, தமிழக மண்ணின் கலை மரபை உள்வாங்கிக் கொண்டார்.
தொடர்ந்து பல மேடைகளில் தனது நாதஸ்வர கச்சேரியை அரங்கேற்றி, இசையுலகில் பரிமளித்து வந்தார். மெகபூப் சுபானி அவர்களின் வாழ்வில் பல விருதுகள் கிடைத்தாலும், தமிழக மண்ணின் மீது அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது.

இது குறித்து, அவரது மகன் பெரோஸ் பாபு கூறும்போது..
"எனது தந்தை தமிழக முதல்வர் கையில் நேரடியாக ஒரு விருதைப் பெற வேண்டும் என்பது நீண்ட கால ஆசையாக இருந்தது. அந்த ஆசை கடந்த 2022-ம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கைகளால் விருது பெற்றபோது நிறைவேறியது" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 56 ஆண்டுகளாக இசைப்பணியாற்றி வரும் இந்த தம்பதியினரின் கலைப் பயணத்தைப் பாராட்டி பல்வேறு அரசு அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 'கலைமாமணி' விருது. இந்திய அரசின் உயரிய 'பத்மஸ்ரீ' விருது. ஆந்திர அரசின் 'YSR வாழ்நாள் சாதனையாளர் விருது. மஹாராஜபுரம் சந்தானம் நினைவு விருது', விகடன் வழங்கிய விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளனர். அதேபோல், கடந்த 2005-ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பைப் பெற்றனர்.

அப்போது, கலாம் அவர்கள் வழங்கிய அறிவுரைப்படி, மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்காகத் தொடர்ந்து பல இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்தி, இசையைச் சேவையாகவும் மாற்றிக் காட்டினர். கனடா, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா என உலக நாடுகளைத் தனது நாதஸ்வர இசையால் கட்டிப்போட்ட ஒரு மகா கலைஞனின் மறைவு, இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.




















