பகலில் 5 ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்; இரவில் திருடன் - விரைவில் பணம் ஈட்ட நினைத்த...
திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! - காரணம் என்ன?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை மார்ச் 23-ம் தேதி திருத்தணியிலிருந்து தொடங்குகிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, மாநாடு, வேட்பாளர் அறிவிப்பு, வாக்குறுதிகள் வெளியீடு என அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. இச்சூழலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் பிரசாரத்தையும் தொடங்குகிறார்.
நம்மிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்கள் சிலர் "பிப்ரவரி 21-ம் தேதி மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்தி அந்த மேடையிலேயே 234 வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டோம். கடந்த ஒருமாதமாக வேட்பாளர்கள் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில், நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும், வேளாண்மை, ஆடு, மாடு வளர்த்தல் போன்றவை அரசு வேலையாக அறிவிக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை, முழுமையான பூரண மதுவிலக்கு, உழவர்களே உணவு பொருட்களுக்கு விலை தீர்மானிக்கும் உரிமை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறோம். இச்சூழலில்தான் பிரசாரத்துக்கு கிளம்புகிறார் அண்ணன் சீமான்" என்றார்.
நம்மிடம் பேசிய அக்கட்சி நிர்வாகிகள் சிலர், "பொதுவாக கன்னியாகுமரியில் திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்திவிட்டு பிரசாரத்தையோ, மாநில சுற்றுப் பயணத்தையோ அண்ணன் சீமான் தொடங்குவார்.
குமரியில் தொடங்கி சென்னையில் முடிப்பதே வழக்கமான பிரசார ரூட். இம்முறையும் அதற்கான வேலைகள் நடந்தன. ஆனால், 'தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளிலிருந்து பிரசாரத்தை தொடங்கிட வேண்டும்' என்பது அண்ணனின் விருப்பமாக இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக முப்பாட்டன் முருகனின் தீவிர பக்தராகவே மாறிவிட்டார். மேலும் மார்ச் 23-ம் தேதி தேய்பிறை அஷ்டமி என்பதால் அன்று அறுபடை வீடான திருத்தணியில் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என முடிவெடுத்தோம்.
மார்ச் 23-ம் தேதி காலை திருத்தணி முருகன் கோவில் வழிபாட்டோடு பிரசாரம் தொடங்கும். திருத்தணியில் தொடங்கி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பிரசாரங்களை முதற்கட்டமாக முடிக்கிறோம். ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று இடங்களில் பேசுகிறார். பிறகு மார்ச் 30ம் தேதி அவர் போட்டியிடும் காரைக்குடி தொகுதிக்கு செல்கிறார். வேட்புமனு தாக்கல் பணிகள் நிறைவடைந்த பிறகு இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்குவார். பிரசாரத்தில் எல்.இ.டி திரைமூலம் நாம் தமிழர் அரசு எப்படி இருக்கும் என காணொளி வாயிலாக விளக்க உள்ளார். பிறகு திராவிடக் கட்சிகள் அட்டாக், பாடல்கள் என கலவையாக இருக்கும்" என்றனர்.


















