Iran: இஸ்ரேலின் செயல்; ஆதரித்த ட்ரம்ப்; மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதா ஈரான...
துரத்திய போலீஸ்; குளத்திற்குள் 5 மணி நேரம் பதுங்கி இருந்த திருடர்; தாமரை தண்டு மூலம் சுவாசித்தாரா?
மத்தியப் பிரதேசத்தில் திருடன் ஒருவன் போலீஸாரிடமிருந்து தப்பிக்கச் செய்த காரியம் போலீஸாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அங்குள்ள ரயில்களில் அடிக்கடி பெண்களிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவன் சிஹோரா ரயில் நிலையத்தில் நிற்பது ரயில்வே போலீஸாருக்குத் தெரிய வந்தது. உடனே ரயில்வே போலீஸார் அவனைக் கைது செய்ய சென்றனர்.
ஆனால் அந்தத் திருடன் ரயில் தண்டவாளம் வழியாகத் தப்பித்து ஓடினான். அவனை ரயில்வே போலீஸார் தொடர்ந்து விரட்டி சென்றனர். அந்நேரம் ரயில் தண்டவாளம் அருகில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்திற்குள் திருடன் குதித்துவிட்டான்.
உடனே ரயில்வே போலீஸாரும் அவனை குளத்தில் தேடினர். ஆனால் அவனைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. தண்ணீருக்குள் இருந்து எப்படியும் வெளியில் வந்துதானே ஆகவேண்டும் என்று கருதி ரயில்வே போலீஸார் குளத்தைச் சுற்றி நின்றனர்.

ஆனால் மணிக்கணக்கில் திருடன் தண்ணீருக்குள் இருந்து வெளியில் வரவே இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் ரயில்வே போலீஸார் திருடனைக் கண்டுபிடிக்க நீச்சல் விரர்களை குளத்திற்குள் இறக்கினர்.
அவர்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு தண்ணீருக்குள் மறைந்து இருந்த திருடனைக் கண்டுபிடித்து கைது செய்தனர். 5 மணி நேரம் திருடன் தண்ணீருக்குள் மறைந்து இருந்தான். இது குறித்து அத்திருடனிடம் விசாரித்தபோது குளத்தில் இருந்த தாமரை தண்டின் மூலம் 5 மணி நேரமாக தண்ணீருக்குள் இருந்து கொண்டு சுவாசித்ததாக அத்திருடன் தெரிவித்தான்.
மேலும் அவன் ரயில்களில் ஏ.சி பெட்டியில் பயணம் செய்யும் பெண்களைக் குறி வைத்து திருடி வந்ததாகவும், இதுவரை 12க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருடி இருப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தான்.
அவனது பெயர் ஹர்விந்தர் சிங் என்றும், சொந்த ஊர் உத்தரப்பிரதேசம் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் மத்தியப் பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் திருடி வந்துள்ளான்.
ரயில்களில் டிக்கெட் இல்லாமல் ஏறி பெண்களிடம் திருடிவிட்டு நடுவழியில் இறங்கிச்சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.




















