`அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரம்; விரக்தியில் இலாயக்கற்ற அரசு...' - மு.க.ஸ்டா...
`நண்பர்' பிரதமர் மோடியிடம் முறையிட்ட முதியவர்; அபகரித்த நிலத்தை திரும்பக் கொடுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ!
மும்பை பயந்தர் பகுதியைச் சேர்ந்த அஸ்கர் அலி வோரா என்பவர் தனது நிலத்தை பா.ஜ.க எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவும், வேறு ஒரு கட்டுமான நிறுவனமும் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அந்த நிலத்தை தான் 1989ம் ஆண்டு விலைக்கு வாங்கியதாகவும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து புகார் செய்தார். அந்த நிலத்தை மீட்க பல அரசு அமைப்புகளில் 15 ஆண்டுகளாக முறையிட்டும் எந்த வித பலனும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
குஜராத்தின் வத்நகரில் உள்ள பி.என் பள்ளியில் வோராவும், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து படித்தனர். 1989ம் ஆண்டு பயந்தர் கிழக்கு பகுதியிலுள்ள நவ்கரில் 2,810 சதுர மீட்டர் நிலத்தை தான் வாங்கியிருந்ததாகவும், ஆனால் 2011-ல் அந்த நிலத்தை 'சுயம் பில்டர்ஸ்' மற்றும் நரேந்திர மேத்தாவின் 'செவன்-இலவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்கள் அபகரித்துக்கொண்டதாகவும் வோரா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு அரசு அதிகாரிகளிடம் இது தொடர்பாக தான் தொடர்ந்து முறையிட்டு வருவதாகவும் அவர் கூறினார். பிரதமருடனான சந்திப்பின்போது அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்ததாகவும் வோரா குறிப்பிட்டு இருந்தார். வோரா இவ்விவகாரத்தில் நரேந்திர மோடியைச் சந்தித்ததைத் தொடர்ந்து இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதோடு மாநில அரசும் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தியது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண முதல்வரின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகர் பர்தேசி தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் மீரா பயந்தர் மாநகராட்சி கமிஷனர் ராதா சர்மா, வோரா, நரேந்திர மேத்தா ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான தனது உரிமையைக் கைவிடுவதாகவும், தனக்கு வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியைத் திரும்ப ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை நரேந்திர மேத்தா அரசிடம் சமர்ப்பித்தார்.
அந்த நிலம் 2019-ஆம் ஆண்டில் மெர்வின் பெர்னாண்டஸ் என்பவரிடமிருந்து வாங்கப்பட்டதாக மேத்தா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதோடு வோரா மீது போலீஸில் கொடுத்துள்ள புகாரையும் திரும்பப் பெறுவதாக நரேந்திர மேத்தா தெரிவித்தார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.


















