குளித்தலை: `எங்க தொகுதியில இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க!' - மக்கள் முன்வைக்கும் `...
நினைவுச் சுவடுகள் 10: ஜனநாயக அரசியலின் நினைவுச் சின்னம் - சைக்கிள் பேரணி!
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் என்றால், பெரிய பொதுக்கூட்டங்கள், திரைப்படக் காட்சிகளை நினைவூட்டும் ஊர்வலங்கள், பரபரப்பான மேடைப் பேச்சுகள் என பல அம்சங்கள் நினைவுக்கு வரும். ஆனால் அந்த இரைச்சல் மிக்க வரலாற்றின் ஓரத்தில், அமைதியாகவும் எளிமையாகவும் நடைபெற்ற சைக்கிள் பேரணிகளும் இடம் பெற்றுள்ளன.
சைக்கிள் பேரணி என்பது மக்களுடனான தொடர்பையும் அணுகுமுறையையும் அரசியல் கட்சிகளுக்கு எளிமையாக்கியது. குக்கிராமங்களிலும், கிராமப்புற சாலைகளிலும், குறுகிய தெருக்களிலும் புகுந்த புறப்பட்ட சைக்கிள்கள், தேர்தல் பிரசாரத்தை ஒரு திருவிழா போல மக்களிடம் கொண்டு சென்றன.
தமிழகத் தேர்தல் அரசியலில், சைக்கிள் பேரணி என்பது மாநிலத்தின் அரசியல் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றிய ஒன்றாக இருந்தது. 1960–70களில், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் பின்னர் உருவான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள், வழக்கமான மேடைப் பிரசாரம், லவுட்ஸ்பீக்கர்கள் கட்டப்பட்ட வாகனங்களைக் கடந்தும், மக்களை அணுக புதிய வழிகளைத் தேடின. கிராமப்புறத் தெருக்களில் வீடு வீடாக சென்று பேசுவதுதான், தங்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் முக்கியமான வழி என்பதை அந்தக் கட்சிகள் நன்கு உணர்ந்திருந்தன.

மோட்டார் வாகன பேரணிகளுக்கு எரிபொருள், வாகனம், ஓட்டுநர் சம்பளம் போன்ற பல செலவுகள் தேவைப்பட்டது. இது பல சமயங்களில், உள்ளூர் கட்சி அமைப்புகளுக்குப் பெரும் பொருளாதார சுமையாக இருந்தது. ஆனால் சைக்கிள், எளிதாகக் கிடைக்கும் மற்றும் குறைந்த செலவு கொண்ட ஒரு வாகனமாக இருந்தது. குறுகிய தெருக்கள், கிராமப் பாதைகள், மண் சாலைகள் என எங்கு வேண்டுமானாலும் சைக்கிள்களால் செல்ல முடிந்தன. தேநீர் கடை, பேருந்து நிறுத்தம் அல்லது ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தி மக்களுடன் பேசுவதற்கும் அது வசதியாக இருந்தது.
கட்சித் தொண்டர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும், சைக்கிள் பேரணி என்பது உழைப்பின் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருந்தது. ஒரு தலைவர் மேடையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களிடம் பேச முடிந்தால், சைக்கிளில் சென்ற தொண்டர்கள் அந்தத் தலைவரின் செய்தியை ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கும் கொண்டு சென்று சேர்த்தனர்.
மக்களின் ஆர்வம்
ஒரு சைக்கிள் பேரணி பொதுவாகத் தேர்தலுக்கு பல வாரங்களுக்கு முன்பே தொடங்கும். கட்சி அமைப்பாளர்கள் மாணவர்கள், இளைஞர் அணியினர், உள்ளூர் செயற்பாட்டாளர்கள்... எனத் தொண்டர்களை ஒன்று சேர்ப்பார்கள். அவர்களின் சைக்கிள்களின் முன்புறம் உள்ள கைப்பிடிகளில் கட்சி சின்னம் பொறித்த கொடிகள் பறக்கும். ஒரே மாதிரியான தொப்பி அல்லது துண்டுகளை அணிந்து தொண்டர்கள் சைக்கிள்களில் அணி வகுப்பார்கள்.
பேரணிக்கான பாதைகள் முன்கூட்டியே திட்டமிடப்படும். வார்டு எல்லைகள், கிராமக் குழுக்கள், சந்தைப் பகுதிகள், முக்கியமான பொது இடங்கள் ஆகியவை குறிக்கப்படும். மக்கள் அதிகம் வெளியில் நடமாடும் நேரமான காலை அல்லது மாலை வேளைகளில் பேரணி தொடங்கும்.
ஒரே சீரான ஓசையில் சைக்கிளை மிதித்துக்கொண்டுச் செல்லும் அந்தப் பிரசாரக் குழுவினர், தொகுதி முழுவதும் சுற்றி வருவார்கள். வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் மெதுவாகச் சென்று, முழக்கங்களை எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை வழங்குவார்கள். சைக்கிளை மிதிக்கும் ஒலி , அதற்கிடையே எழும் முழக்கங்கள் போன்ற அனைத்தும் அந்தப் பிரசாரத்தின் இசையாகவே மாறும்.
நகரப் பகுதிகளில், குறுகிய சாலைகளில் செல்லும் சைக்கிள் பேரணிகள் சில நேரங்களில் தற்காலிகமாக போக்குவரத்தையே முடக்கிவிடும். இதனால் கடைக்காரர்கள், வழிப்போக்கர்கள் கவனத்தை ஈர்க்கும். முழுமையான ஆதரவு கிடைக்காவிட்டாலும், சம்பந்தப்பட்ட கட்சிகள் மீது குறைந்தபட்சம் ஆர்வத்தையாவது மக்களிடையே உருவாக்கும்.

மக்களுடன் நேரடித் தொடர்பு
தமிழகத்தில் ஏதாவது ஒரு கட்சியில் இருந்த அல்லது தான் சார்ந்த கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட மூத்த தலைமுறையினருக்கு, சைக்கிள் பேரணிகள் என்பது இன்னும் மறக்க முடியாத தேர்தல் நினைவுகளாகவே உள்ளன. இளம் வயதில், அல்லது கல்லூரி மாணவர்களாக இருந்த காலத்தில், வெயிலையும் தூசியையும் பொருட்படுத்தாமல் வயல்வெளிகள், மண் சாலைகள் வழியாக சைக்கிளை மிதித்து பிரசாரம் செய்த நாட்களை பலரும் நினைவு கூறுவார்கள். அவர்களுக்கு அந்தச் சைக்கிள் பேரணிகள், தோழமை உணர்வையும் ஒரு கடமை செய்த திருப்தியையும் தந்த அனுபவமாக இருந்தது.
இந்த நினைவுகள், அரசியல் அனுபவம் கொண்ட மூத்தவர்கள், கட்சித் தொண்டர்கள், சாதாரண வாக்காளர்கள் ஆகியோரின் வாய்மொழி கதைகளிலும் பேட்டிகளிலும் இன்றும் இடம் பெறுகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது, ஜீப் போன்ற திறந்த வாகனங்களில் வந்து பிரசாரம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், கிராமங்களில் சைக்கிளில் வந்த இளைஞர்கள்தான் ஒவ்வொரு தெருக்களிலும் வந்து பேசினார்கள். ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டு முன்பாகவும் நின்று பேசுவது அன்றைய பிரசாரத்தின் தனிச்சிறப்பாக இருந்தது.
இன்றைய பெரிய வாகன பேரணிகளில் மக்கள் பெரும்பாலும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், பழைய சைக்கிள் பேரணிகள் உரையாடலுக்கான இடத்தை உருவாக்கின. சைக்கிளில் வந்த ஒரு தொண்டர் நின்று பேசலாம், கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம், நேரடித் தொடர்பை உருவாக்கலாம். அந்த மனிதத் தொடர்புதான், பல வாக்காளர்களின் மனதில் ஆழமான நினைவாக பதிந்தது.
சைக்கிள் பேரணிகளின் அரசியல் குறியீடுகள்
சைக்கிள் பேரணிகள் வெறும் பிரசார ஏற்பாடாக மட்டுமல்லாது அவை ஒரு ஆழமான அரசியல் குறியீட்டையும் சுமந்து சென்றன. எளிமை, சாதாரண மக்களிடம் நெருக்கம், அவர்கள் வாழும் இடத்திற்கே சென்று பேசும் மனப்பான்மை ஆகியவற்றை இந்தப் பேரணிகள் வெளிப்படுத்தின. திரைப்படப் புகழும், மேடைப் பேச்சும் கொண்ட தலைவர்கள் உருவான காலத்திலும், சைக்கிள் பேரணிகள் அரசியலை சாமானிய மக்களுடன் இணைத்தன.
சைக்கிளில் மிதித்துச் செல்லும் தொண்டர்கள், நாமெல்லாம் ஒரே மாதிரியான வாழ்வாதாரமும், ஒரே மாதிரியான பிரச்னைகளும், ஒரே எதிர்கால நம்பிக்கையும் கொண்டவர்கள் என்கிற உணர்வை மக்களுக்குக் கடத்தினர்.
இந்தச் சைக்கிள் பேரணிகள் ஒரு ஒப்பீட்டையும் உருவாக்கின. பெரிய வாகனங்கள், பேனர்கள், ஒலிபெருக்கிகள் இல்லாமலேயே, அடித்தளத்தில் உழைக்கும் தொண்டர்களின் சைக்கிள் பேரணி கூட அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அது வெளிப்படுத்தியது.

இளைஞர்கள் ஆதரவை திரட்டிய நகர்ப்புற பேரணிகள்
சைக்கிள் பேரணிகள் பெரும்பாலும் கிராமப்புற அரசியலுடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் சிறிய நகரங்களிலும் நகர எல்லைப் பகுதிகளிலும் அவை முக்கிய இடம் பெற்றிருந்தன. 1980களிலும் 1990களின் தொடக்க காலத்திலும், முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அணிகள், தேர்தலுக்கு முன்னதாக இரவு நேரங்களில் சைக்கிள் பேரணிகளை நடத்தினர். கல்லூரிகள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக சைக்கிள்களில் சென்று முழக்கங்கள் எழுப்பி, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணிகள், குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்க இருந்த இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை உருவாக்கின. இளைஞர்கள் ஆதரவைத் திரட்டுவதே இந்தப் பேரணிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.
1990களின் இறுதிப்பகுதியிலும் 2000களின் தொடக்கத்திலும், தமிழ்நாட்டின் தேர்தல் பிரசாரங்கள் தொழில்நுட்ப ரீதியாக மாற்றமடையத் தொடங்கின. கட்சிகளுக்கான பிரத்யேக ஊடகங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது, சைக்கிள் பேரணிகளின் முக்கியத்துவம் மெதுவாகக் குறைந்தது. தொலைக்காட்சி, ஒலிபெருக்கி வாகனங்கள், டிஜிட்டல் பிரசாரம் போன்றவை உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பேரணிகளின் தாக்கத்தைக் குறைத்தன.
சைக்கிள்களில் பெரிய ஸ்பீக்கர்களை ஏற்ற முடியாது. சைக்கிள் பேரணிகளின் வேகமும் குறைவு, வீச்சும் குறைவு. அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வளங்கள் கிடைக்கத் தொடங்கியதும், பிரசாரத்தின் போக்கே மாறிவிட்டது. ஆனால், சைக்கிள் பேரணிகள் மறைந்துவிட்டன என்று சொல்ல முடியாது.

மீண்டும் தொடங்கும் சைக்கிள் பேரணிகள்
சமீப ஆண்டுகளாக, சில உள்ளூர் அரசியல் அமைப்புகளும் மாணவர் இயக்கங்களும், சிறிய அளவில் சைக்கிள் பேரணிகளை மீண்டும் நடத்தத் தொடங்கியுள்ளன. இவை முழுமையான பிரசார கருவிகளாக இல்லாமல், ஒரு குறியீட்டு முயற்சியாகவே அதிகம் அமைந்துள்ளன. கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கும் நோக்குடன் நடத்தப்படும் இப்பேரணிகள், ஒருகாலத்தில் ஜனநாயக ஈடுபாடு என்பது மனித உழைப்பும் நேரடி பங்கேற்பும் என்றிருந்த காலத்தை நினைவூட்டுகின்றன.
இந்தப் பேரணிகளை அனுபவித்த தலைமுறையைச் சேர்ந்த முதியவர்கள், இன்றும் அவற்றைப் பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள். இந்தியத் தேர்தல்கள் மற்றும் அடிப்படை அரசியல் இயக்கங்களைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தொலைக்காட்சி வருகைக்கு முந்தைய காலகட்டத்தில், குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்ட பிரசார முறைகள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. அவற்றில் சைக்கிள் பேரணிகள் எளிமையான, ஆனால் சமூக ரீதியாக வலுவான அரசியல் பங்கேற்பு வடிவங்களின் ஒரு பகுதியாக இருந்தன என்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் சைக்கிள் பேரணிகள், ஜனநாயக அரசியலின் ஒரு முக்கிய நினைவுச் சின்னமாகவே இருந்து வருகின்றன.













