இளைஞர்களிடம் அதிகரிக்கும் மாரடைப்பு: `அதீத மகிழ்ச்சி, உடற்பயிற்சியும் ஆபத்தே'- ம...
Doraemon: விடைபெற்றார் அனிமேஷனுக்கு உயிர் கொடுத்த கலைஞன்! யார் இந்த சுடோமு ஷிபயாமா?
நமது பால்ய கால நினைவுகளை அழகாக்கிய அந்த நீல நிற மாயப் பூனையான டோரிமானின் (Doraemon) அனிமேஷன் உலகை உருவாக்கிய பிதாமகன் சுடோமு ஷிபயாமா (Tsutomu Shibayama) சமீபத்தில் தனது 84-வது வயதில் விடைபெற்றார்.

டோரிமான் என்ற கதாபாத்திரத்தை முதன்முதலில் 1969-ஆம் ஆண்டு காமிக்ஸ் (Manga) வடிவில் உருவாக்கியவர்கள் 'புஜிகோ எஃப். புஜியோ' (Fujiko F. Fujio) என்ற இரட்டையர்கள். காகிதத்தில் வரையப்பட்டிருந்த அந்த டோரிமானுக்குத் திரையில் உயிர் கொடுத்து, இன்று நாம் தொலைக்காட்சியில் கொண்டாடும் அனிமேஷன் உலகை உருவாக்கியவர் இயக்குநர் சுடோமு ஷிபயாமா தான்.
1979-ல் தொடங்கிய டோரமான் தொலைக்காட்சித் தொடரின் உணர்வுபூர்வமான கதைசொல்லல் முறையையும், அதன் காட்சி அமைப்புகளையும் வடிவமைத்த பெருமை இவரையே சாரும்.
ஷிபயாமா 1941-ஆம் ஆண்டு டோக்கியோவில் பிறந்தார். அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம். மிகவும் சவாலான அந்தச் சூழலில்தான் அவரது குழந்தைப் பருவம் கழிந்தது. தனது 22-வது வயதில் (1963-ல்), ஜப்பானின் புகழ்பெற்ற `டோய் அனிமேஷன்' (Toei Animation) நிறுவனத்தில் ஒரு சாதாரண அனிமேட்டராக தனது தொழில்முறைப் பயணத்தைத் தொடங்கினார். காகிதங்களில் உயிரோவியங்களை வரையும் அந்தப் பணி அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.

1966-ல் 'ஏ புரொடக்ஷன்' (A Production - இதுவே பின்னர் `ஷின்-எய் அனிமேஷன்' என மாறியது) நிறுவனத்திற்கு மாறினார். அங்கு `தி கட்ஸி ஃப்ராக்' (The Gutsy Frog), 'டென்சாய் பகாபான்' (Tensai Bakabon) போன்ற தொடர்களில் பணியாற்றி தனது அனிமேஷன் திறமையை மெருகேற்றிக் கொண்டார்.
இளமைக் காலத்தின் கடின உழைப்பும், கற்பனைத் திறனும் அவருக்குத் தந்த நம்பிக்கையில், 1978-ல் தனது நண்பர்களுடன் இணைந்து 'அஜியா-டோ அனிமேஷன் வொர்க்ஸ்' (Ajia-do Animation Works) என்ற ஸ்டுடியோவை நிறுவினார்.
டோரிமானையும் அதன் நண்பர்களையும் அவர் வெறும் கார்ட்டூன்களாகப் பார்க்கவில்லை. ஷிபயாமா தன் ஓய்வு நேரங்களில் சில சிறப்பு ஓவியங்களை வரைவார். அதில் அவரும் அவரது படக்குழுவினரும் கேமரா, மைக் போன்றவற்றை வைத்துக்கொண்டு டோரமானையும் நோபிதாவையும் நிஜ நடிகர்களைப் போல வைத்து படப்பிடிப்பு நடத்துவது போல வரைந்திருப்பார்! அந்த அளவுக்கு டோரிமான் உலகம் அவருக்குள் இரண்டறக் கலந்திருந்தது.
1983 முதல் 2004 வரை, அதாவது தொடர்ந்து 22 வருடங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஒரு டோரிமான் திரைப்படத்தை அவர் இயக்கி வெளியிட்டார். வருடத்திற்கு ஒரு திரைப்படம் என்பது அனிமேஷன் துறையில் அசுரத்தனமான உழைப்பைக் கோரும் ஒன்றாகும்.

ஷிபயாமாவின் வாழ்வில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவர் அனிமேஷனை வெறும் வேலையாகப் பார்க்கவில்லை; அதுவே அவரது மூச்சாக இருந்தது. டோரிமான் மட்டுமின்றி, 'சிபி மருக்கோ-சான்' (Chibi Maruko-chan), 'நின்டாமா ரண்டாரோ' (Nintama Rantaro) போன்ற புகழ்பெற்ற தொடர்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. இதனால் ஜப்பானிய மக்கள் இவரை அன்போடு `தேசிய அனிமேஷனின் தந்தை’ என்று அழைக்கிறார்கள்.
அவரது வாழ்நாள் சாதனையைப் பாராட்டி, ஜப்பானிய கலாசார விவகாரங்களுக்கான நிறுவனம் 2012-ஆம் ஆண்டிலும், டோக்கியோ அனிமேஷன் விருது விழா 2018-ஆம் ஆண்டிலும் அவருக்கு `வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை' வழங்கி கௌரவித்தன.
தனது வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவே அர்ப்பணித்த ஷிபயாமா, தனது கடைசி காலத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் குன்றிய நிலையிலும், கலை மீதான அவரது ஈடுபாடு குறையவே இல்லை.
நோயுடனான நெடிய போராட்டத்திற்குப் பிறகு, தனது 84-வது வயதில், 2026-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார். ஆடம்பரங்களை விரும்பாத அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி, நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இறுதிச்சடங்கு மிகவும் அமைதியாக நடைபெற்றது. இந்தத் துயரச் செய்தியை அவரது அனிமேஷன் நிறுவனம் சில நாட்கள் கழித்து (மார்ச் 17, 2026 அன்று) உலகிற்கு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த விரும்புவதால், பொதுவான ஒரு நினைவு அஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என்று அவரது ஸ்டுடியோ அறிவித்துள்ளது.
சுடோமு ஷிபயாமா இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவர் உருவாக்கிய அந்த பேம்பூ காப்டர் (Bamboo Copter) வழியாக அவர் எப்போதும் நம் குழந்தைப்பருவ நினைவுகளின் வானில் பறந்து கொண்டே இருப்பார்.

















