"திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்"- த.வா.க தலைவர் வேல்முருகன...
`நீங்கள் வராவிட்டால் விற்று இருப்பார்கள்'- ஐஏஎஸ் அதிகாரி என கூறி திருமணம்செய்து பெண்ணை விற்க முயற்சி
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தனது மகளுக்கு மணமகன் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் எட்டாவா நகரை சேர்ந்த பிரித்தம்குமார் என்பவர் பெண் கேட்டு வந்தார். பிரித்தம்குமார் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். தான் மாணிக்பூரில் பணியில் இருப்பதாகவும் கூறினார். அதோடு அரசு அலுவலகத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை ரஞ்சித் குமாரிடம் காட்டினார். மேலும் அரசியல்வாதிகளுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் காட்டினார். இதையடுத்து பிரித்தம் குமார் சொன்ன தகவல்கள் உண்மையானதுதானா என்பதை விசாரிக்காமலே தனது மகளை திருமணம் செய்து கொடுக்க ரஞ்சித் குமார் முடிவு செய்தார்.
அதோடு அது குறித்து விசாரித்தால் திருமணம் நின்றுவிடும் என்று அவர் அச்சம் அடைந்தார். திருமண பேச்சுவார்த்தை நடந்தபோது வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று பிரித்தம்குமார் சொன்னார்.

ஆனால் கடைசி நேரத்தில் திருமண செலவுக்கு என்று ரூ.15 லட்சம் கொடுக்கும்படி கேட்டார். இதையடுத்து முதலில் ரூ.10 லட்சமும், திருமண நிச்சயதார்த்தத்தின்போது 5 லட்சமும் ரஞ்சித் குமார் கொடுத்தார். திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. திருமணத்திற்கு மட்டும் ரஞ்சித் குமார் ரூ.15 லட்சம் செலவு செய்தார்.
திருமணத்தின் போது தன்னை வெளிநாட்டிற்கு இடமாற்றம் செய்து இருப்பதால் தனக்கு திருமணத்தில் கொடுக்கப்படும் வீட்டு சாமான்கள் அனைத்தையும் உங்களிடமே திரும்ப கொடுத்துவிடுவேன் என்றும் பிரித்தம் குமார் சொன்னார். கடந்த 11ம் தேதிதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் தங்குவதற்கு ரஞ்சித் குமார் ஹோட்டல்களில் அறை ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால் திருமணமாகி மணமகன் வீட்டிற்கு செல்லும்போது மணமகளை துன்புறுத்த ஆரம்பித்தனர்.
மணகளை விற்க முயற்சி
வீட்டிற்கு சென்றபோதும் மணமகளை தனியாக ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். இதையடுத்து அப்பெண் தனது தந்தைக்கு போன் செய்து இது குறித்து தெரிவித்தார். உடனே ரஞ்சித் குமார் தனது மகளை பார்க்க சென்றார். அங்கு சென்று பார்த்தபோது அவரது மகள் சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். ரஞ்சித் குமாரை பார்த்தவுடன் பிரித்தம் குமாரும், அவரது சகோதரியும் அங்கிருந்து தப்பித்து சென்றனர். பின்னர் ரஞ்சித் குமார் தனது மகளிடம் விசாரித்தபோது, அவர்கள் தன்னை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தார். நீங்கள் சரியான நேரத்தில் வராமல் போயிருந்தால் அவர்கள் என்னை விற்பனை செய்து இருப்பார்கள் என்று கூறி அப்பெண் ரஞ்சித் குமாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ரஞ்சித் குமாரை விரைவில் கைது செய்வோம் என்று போலீஸார் உறுதியளித்துள்ளனர்.





















