தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! -...
நெல்லை: திருமணம் மீறிய உறவு; பத்திரப்பதிவு எழுத்தர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம்!
நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள ஆணையப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், மூலைக்கரைப்பட்டியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்துவிட்ட நிலையில் தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இட்டேரியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். வீட்டிலிருந்து தனது பத்திர அலுவலகத்திற்கு பைக்கில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற நிலையில், மற்றொரு பைக்கில் வந்த இரண்டு பேர் சுந்தரின் பைக் மீது மோதினர். இதில், சுந்தர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இருவரும் சுந்தரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்தனர்.

அவர்களிடமிருந்து சுந்தர் தப்பியோடினார். இருப்பினும், அவரை விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதனயடுத்து அப்பகுதியிலிருந்தவர்கள் சுந்தரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இவ்வழக்கில் தொடர்புடைய மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், அவரது தம்பி சுடலை ஆகியோர் மூலைக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் முன்னீர்பள்ளம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மணிகண்டனின் மனைவி முத்துமாரி, கடந்த ஓராண்டுக்கு முன்பு சுந்தரிடம் பத்திரம் எழுதச் சென்றுள்ளார். அப்போது சுந்தருக்கும் முத்துமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் திருமணம் மீறிய உறவாகியுள்ளது.
இதனால், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனையறிந்த மணிகண்டன், முத்துமாரியையும் சுந்தரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், இருவரும் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை. இதனால், கணவன் – மனைவி இருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், முத்துமாரி கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனாலும், முத்துமாரியும், சுந்தரும் தொடர்ந்து செல்போனில் பேசியும், தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சுந்தர் வசித்து வரும் இட்டேரியிலுள்ள வீட்டின் அருகேயே முத்துமாரி குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில் குடி புகுந்துள்ளார். இது, மணிகண்டனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை சொல்லியும் சுந்தர் கேட்காததால், மணிகண்டனும் அவரது தம்பி சுடலையும் அரிவாளால் சுந்தரை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய அரிவாள்கள் மற்றும் பைக்கை போலீஸர் பறிமுதல் செய்தனர்.


















