Vijay: "கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள்" - விஜய் சொன்ன 'வெள்ளை அறிக்கை' எ...
பீகார்: ATM-க்குள் சென்று முடிவெட்டிக்கொள்ளும் மக்கள்; வைரலாகும் ஏடிஎம் சலூன் பற்றி தெரியுமா?
சமீப காலமாக ஆன்லைன் பணப்பரிவத்தனை அதிகரித்து இருப்பதால் மக்கள் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது குறைந்து இருக்கிறது. இதனால் அதிகமான ஏ.டி.எம்.கள் நகரங்களில் மூடப்பட்டு வருகின்றன.
சில ஏ.டி.எம்.கள் பணம் நிரப்பப்படாமல் மூடப்பட்டு இருக்கின்றன. பீகாரில் அது போன்று மூடப்பட்ட ஏ.டி.எம் ஒன்று இப்போது சலூனாகச் செயல்பட்டு வருகிறது. அதுவும் சம்பந்தப்பட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். அறிவிப்பு பலகையைக் கூட அகற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டு சலூன் கடை செயல்பட்டு வருகிறது.
பீகாரின் தானாபூர் என்ற இடத்தில் இந்த ஏ.டி.எம். சலூன் செயல்பட்டு வந்தது. இதனால் அந்த ஏ.டி.எம் சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
உள்ளே சலூன் கடை இருப்பது தெரியாமல் அதிகமானோர் பணம் எடுக்க உள்ளே சென்றுவிட்டு உள்ளே முடிவெட்டுவதற்கு கண்ணாடியும், இருக்கைகளும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

அவர்களிடம் சலூன் கடைக்காரர் ஏ.டி.எம். மூடப்பட்டு விட்டது என்று கூறி வருகிறார். இதனால் பணம் எடுக்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் வெளியில் வந்து கொண்டிருந்தனர். ஏ.டி.எம் சலூன் சமூக வலைத்தளத்தில் வைரலானவுடன் சலூன் கடைக்கு வெளியில் இருந்த எஸ்.பி.ஐ. ஏ.எம் போர்டு அங்கிருந்து அகற்றப்பட்டது.
இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், ''பல ஆண்டுகளாக அந்த இடத்தில் ஏ.டி.எம். செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஏ.டி.எம். மூடப்பட்டது. அதில் இருந்த மெஷின் திடீரென காணாமல் போய்விட்டது.
அந்த அறை மட்டும் அறிவிப்பு பலகையுடன் அப்படியே இருந்தது. அந்த இடத்தை கடை உரிமையாளர் அப்படியே சலூன் கடைக்கு வாடகைக்கு விட்டார். ஆனால் சலூன் கடைக்காரர் வங்கியின் ஏ.டி.எம். அறிவிப்பு பலகையை அகற்றாமல் அப்படியே சலூன் கடையைத் திறந்துவிட்டார்'' என்று தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் அடிக்கடி பணம் எடுக்க சலூன் கடைக்குள் சென்று வருகின்றனர். சிலர் உள்ளே வந்துவிட்டு பணம் எடுக்கமுடியாமல் முடிவெட்டிக்கொண்டு வெளியில் வருகின்றனர்.
இந்தச் செய்தி வைரலானவுடன் நெட்டிசன்கள் பலரும், வாடிக்கையாளர்கள் இப்போது பணம் எடுக்கச் சென்றுவிட்டு, அதற்குப் பதிலாக ஹேர்கட் செய்துகொண்டு வெளியே வருகிறார்கள் என்று கேலி செய்து வருகின்றனர். வேறு சிலர், அவசரமாக பணம் எடுக்க உள்ளே நுழைந்து, தவறுதலாக ஷேவ் செய்துகொள்ள முன்பதிவு செய்துவிடக்கூடும் என்ற தெரிவித்தனர்.
பழைய வணிக வளாகங்கள், தங்களின் முந்தைய அடையாளத்தின் தடயங்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட வணிகங்களாக உருமாறுவதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.



















