`திமுக நாசமாக போனதற்கு, திமுக-வினர் தான் காரணம்' - முன்னாள் அமைச்சர் மூர்த்தி
புதுச்சேரி: `அவனை தோற்கடித்ததே நான்தான்!’ - கசிந்த செல்போன் ஆடியோ... கடுப்பில் முதல்வர் ரங்கசாமி!
புதுச்சேரி 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மீதம் தோல்வியுற்ற நான்கு தொகுதிகளில் கதிர்காமம் தொகுதியும் ஒன்று.
முதல்வர் ரங்கசாமியின் தொகுதியாகக் கருதப்படும் அந்தத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.பி.ரமேஷ், சுயேச்சை வேட்பாளர் அழகு (எ) அழகானந்தத்திடம் படுதோல்வியடைந்தார்.
முதல்வர் ரங்கசாமியின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட கதிர்காமம் தொகுதியில், அவர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தோல்வியடைந்தது புதுச்சேரி அரசியலில் விவாதப் பொருளானது. `முதல்வர் ரங்கசாமியின் செல்வாக்கு அவரது தொகுதியிலேயே சரிந்துவிட்டது' என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த நிலையில்தான், `என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.பி.ரமேஷைத் தோற்கடித்ததே நான்தான்' என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே.ஜெயபால், பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி ஒருவருடன் அவர் பேசும் அந்த ஆடியோவில், ``கடந்த 5 ஆண்டுகளாக எம்.எல்.ஏ (கே.எஸ்.பி.ரமேஷ்) எங்களை மதிக்கவில்லை. நான் அழகுக்குச் சீட் கேட்டேன் (அழகு (எ) அழகானந்தம்).
கடைசி வரை தருகிறேன் என்று கூறிவிட்டு, பிறகு யார் பேச்சைக் கேட்டார் (முதல்வர் ரங்கசாமி) என்று தெரியவில்லை. ரமேஷுக்குச் சீட்டைக் கொடுத்துவிட்டார். அப்போதே அவரிடம் நான் சொன்னேன், `ரமேஷ் ஜெயிக்கமாட்டான். நான் வேலை செய்ய மாட்டேன்' என்று கூறிவிட்டேன்.
அவரைப் பொறுத்தவரையில் (முதல்வர் ரங்கசாமி) நான் சி.எம்… கட்சியின் தலைவர்… ஜக்கு சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னால் அனைவரும் ஓட்டுப் போடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் நாங்கள் உள்ளூர்க்காரர்கள். நான் இங்கேயே பிறந்து வளர்ந்தவன்.
ரமேஷ் எம்.எல்.ஏ ஆவதற்கு கடந்த முறை நான் விட்டுக்கொடுத்தேன். ஆனால், என்னை எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடக்கூடாது என்றும் என் புகைப்படத்தைப் போடக் கூடாது என்றும் சொன்னது தப்பு.
யாராக இருந்தாலும் அவரை மதிக்க வேண்டும், மதிக்கவில்லை என்றால் இப்படித்தான் ஆகும்" என்கிறார். அதற்கு, `` என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வேலையே செய்யவில்லையா என்பதுதான் என் ஆதங்கம்" என்கிறார் எதிர் முனையில் பேசுபவர்.
அதற்கு பதில் பேசும் என்.எஸ்.ஜே.ஜெயபால், ``இப்போது சொல்கிறேன் கேள். நான்தான் எல்லாருக்கும் போன் செய்தேன். எல்லா அசோசியேஷனுக்கும் போன் செய்தேன். நான்தான் அவரை (கே.எஸ்.பி.ரமேஷை) தோற்கடித்தேன். அரசியலில் நான் எத்தனை கோடி செலவு செய்துவிட்டு வந்துள்ளேன் தெரியுமா? எனக்கு 64 வயது ஆகிறது.
ரமேஷை அரசியலுக்கு அழைத்துக் வந்ததே நான்தான். எப்படி நீங்கள் அவனை ஏற்றுக்கொள்கிறீர்கள் எனத் தெரியவில்லை ? யாரையும் மதிக்கத் தெரியாதவன் அவன். இந்த தேர்தலில் நான் ரமேஷுக்கு எதிராகத்தான் வேலை செய்தேன்.
நான் மறைக்கவில்லை. முதல்வரே சொன்னார், 'ஜெயபால்தான் வேலை செய்து இருப்பார்' என்று. உள்ளூரில் பிறந்து வளர்ந்தவன் நான். எனக்கு எத்தனை பேர் தெரிந்தவர்கள் இருப்பார்கள்? நான் இரண்டு முறை எம்.எல்.ஏ. ஒரு முறை மேயர். ஒரு முறை சேர்மன். இப்போது கட்சியின் பொதுச்செயலாளர். எனக்கு இதுபோதும்.
நான் இடம் வாங்கி வைத்திருக்கிறேன். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு கல்யாண மண்டபம் கட்டப்போகிறேன். 'நீ யாரையும் மதிக்கவில்லை என்று ஜெயபால் கூறுகிறார்' என முதல்வரே ரமேஷிடம் சொன்னார்.
என்னை எதிர்த்து கே.எஸ்.பி.ரமேஷ் சுயேச்சையாக போட்டியிட்டபோது 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த தேர்தலில் தொகுதி முழுவதும் நான்தான் அழகுக்கு ஆதரவு தெரிவித்தேன். ரமேஷுக்கும், அழகுக்கும் இடையே குழப்பம் ஏற்படும்போது, `நீ போட்டியிடுகிறாயா ?' என்று முதல்வர் என்னிடம் கேட்டார்.
ஆனால் நான் முடியாது என்று கூறிவிட்டேன். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மீதும், என்.ஆர்.மீதும் என்னை விட உங்களுக்கு விசுவாசம் இருக்கிறதா? நான் போன் செய்து அனைவரிடமும் பேசினேன். என் நண்பர்கள் அடங்கிய குழுவே ரமேஷ் தோற்பதற்கு வேலை செய்தது.

நான் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அழகை ஜெயிக்க வைத்துவிட்டு கூட்டிட்டு வரலாம் என நினைத்தேன். கட்சிக்கு உழைத்தவன் சொல்வதை அவர் (கே.எஸ்.பி.ரமேஷ்) கேட்கவில்லையே ? அது தப்புதானே? பணம், பதவி வைத்திருந்தாலும், ஒருவரையும் மதிக்கவில்லை என்றால் யார் தேடி வருவார்கள்?
என்.ஆர் (முதல்வர் ரங்கசாமி) நம்மை மதிக்கவில்லை என்றால் நாம் எப்படிப் போவோம் ? நாம் மானம்கெட்டா இருக்கிறோம்? எல்லா எம்.எல்.ஏ-க்களும் என் சொந்தக்காரர்கள்தான். தாடி பாஸ்கர், செந்தில், தனவேலு, டி.பி.ஆர். செல்வம் எல்லாரையும் கட்சிக்கு நான் அழைத்து வந்தேன்.
ரமேஷ் கதை முடிந்துவிட்டது. அதைப் பற்றிப் பேசவேண்டாம். உன்னிடம் பேசியதை யாரிடமும் கூற வேண்டாம்" என்கிறார் என்.எஸ்.ஜே.ஜெயபால்.
இந்த சர்ச்சை ஆடியோ குறித்துப் பேசுவதற்காக என்.எஸ்.ஜே.ஜெயபாலை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.















