`தமிழகத்தில் விவசாயக் கடன் அதிகம்; தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை!’ - மத்திய அம...
போர்களில் ஈரானுக்கு உதவும் ரஷ்யா; ரஷ்யாவிற்கு உதவும் ஈரான்: எப்படி? உண்மையை உடைக்கும் ஜெலன்ஸ்கி?
இதுவரை ஒரு பக்கம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் போர் நடந்துகொண்டிருந்தது. இன்னொரு பக்கம், அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் போர் நடந்துகொண்டிருந்தது.
இப்போது ரூட் மாறி உக்ரைனுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.
ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
கடந்த 25-ம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், "காஸ்பியன் கடலில் நடத்தப்பட்ட நீண்டதூரத் தாக்குதல்களில் மிகச் சிறந்த பலன்களை அடைந்திருக்கிறோம். அதில் ஈரானுடன் தொடர்புடைய ராணுவச் சரக்குப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களும், ஒரு போர்க்கப்பலும் தாக்கப்பட்டிருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

ஈரான் எச்சரிக்கை
இந்தக் கப்பல்கள் மூலம் ஈரான் ரஷ்யாவிற்கு உதவ டிரோன்கள், ஏவுகணைகளை அனுப்பியது என்று உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், ஈரானோ, 'உக்ரைன் தாக்கிய கப்பல் வர்த்தகக் கப்பல்' என்று குற்றச்சாட்டை மறுக்கிறது.
மேலும், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் ஐரோப்பாவைத் தன் போருக்குள் இழுப்பதற்காக, ஜெலன்ஸ்கி ஈரானிய வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி, ஒரு மாலுமியைக் கொன்றுள்ளார். இது ஐ.நா சாசனத்தை வெளிப்படையாக மீறும் செயலாகும்.
ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி கல்லாஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோருடனான தொலைபேசி அழைப்புகளில், இவர் செய்த காரியத்திற்கு 'பதிலடி கொடுக்காமல் சும்மா விட முடியாது' என்பதைத் தெளிவுபடுத்தினேன்" என்று எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கு உதவும் ரஷ்யா
முன்பு, ரஷ்யாவிற்கு உதவி செய்ய டிரோன்களையும், ஏவுகணைகளையும் அனுப்பி வைத்தது ஈரான் என்று குற்றம் சாட்டிய ஜெலன்ஸ்கி, தற்போது ரஷ்யாவும் ஈரானுக்கு உதவி உள்ளது என்று தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
"ரஷ்யா ஈரானிய அரசுக்குச் செய்யும் புதிய உதவிகள் குறித்த தகவல்களை நமது கூட்டாளிகளுடன் பகிர்ந்துகொள்ளுமாறு உளவுத்துறைக்கு உத்தரவிடவுள்ளேன்.

ரஷ்யா டு ஈரான் செல்லும் படங்கள்
ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்தே, வளைகுடா நாடுகளையும் அங்குள்ள அமெரிக்க ராணுவ முகாம்களையும் ரஷ்யா செயற்கைக்கோள் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருவதைப் பதிவு செய்துள்ளோம்.
இந்தப் படங்கள் பின்னர் ஈரானை அடைகின்றன. அதே நேரத்தில், இந்த இடங்களை ரஷ்யா படம் பிடிப்பதற்கும், ஈரான் நடத்தும் தாக்குதல்களுக்கும் இடையே தெளிவான தொடர்பு உள்ளது – தாக்குதலுக்கு முன்னரான தயாரிப்புகளின் போதும் சரி, தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதிலும் சரி.
நான்கு விமானப் படைத்தளங்கள்
ஜூலை 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்களில் மட்டும், ரஷ்ய செயற்கைக்கோள்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் நான்கு விமானப் படைத்தளங்கள் வந்துள்ளன – இதில் இரண்டு பஹ்ரைனிலும், ஒன்று ஜோர்டானிலும், ஒன்று குவைத்திலும் அமைந்துள்ளன.
இதற்கான நோக்கம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு எளிய உண்மையை உலகில் உள்ள நாம் யாருமே அலட்சியப்படுத்தக் கூடாது: தீமை எப்போதும் நிலைமையை மோசமாக்கவும், மேலும் பரவவுமே வழிதேடும்.

ரஷ்யா தடுக்கப்பட வேண்டும். இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர் மீதான அழுத்தம் பலனளிக்க வேண்டும்."
தற்போது போர்களால் உலக நாடுகளில் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் போரில் இருக்கும் நாடுகள் யார் எந்தத் தரப்பிற்கு உதவி செய்தாலும், அது உலக நாடுகளைத் தான் பாதிக்கும் என்பதை மறுத்துவிட முடியாது.














