T20 WC: ஆஸ்திரேலியா ஆல் அவுட்; சம்பவம் செய்த ஜிம்பாப்வே! - கொழும்புவில் என்ன நடந...
மகளிருக்கு ரூ.5,000: "தோல்வி உறுதி என்று தெரிந்ததால், ஆட்சியைத் தக்கவைக்க..!" - ஜெயக்குமார் காட்டம்
முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்' என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புகொண்டு பேசினோம். அவர், ``இப்போது தி.மு.க அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை தேர்தல் பயத்தின் வெளிப்பாடு. ஏற்கனவே நாங்கள் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.2000 கொடுப்போம் என அறிவித்திருந்தோம். இப்போது ஸ்டாலினும் அதேபோல் அறிவிக்கிறார்.
மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து ரூ.5000 கொடுத்திருக்கிறார். ஆனால், அரசு கருவூலமே காலியானாலும் சரி, கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் சரி, இனி தி.மு.க-வுக்கு ஓட்டு விழாது. இது முழுக்க முழுக்க தேர்தலைக் கண்டு வந்த பயம். தோல்வி உறுதி என்று தெரிந்ததால், எப்படியாவது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வாரி வழங்குகிறார்.
கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு மானியம், டீசல் விலை குறைப்பு போன்றவை என்னவானது? கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ஒழிப்பு, ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் என எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இன்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். குறைகளை தீர்ப்போம் எனப் பெட்டி வைத்து மனுக்களை வாங்கினாரே ஸ்டாலின், அந்த மனுக்கள் எல்லாம் இப்போது எங்கே?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ.25,000 வரை கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணத்தை இரண்டு முறை உயர்த்தியது, சொத்து வரி, வீட்டு வரி உயர்வு என மக்களின் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, இப்போது தேர்தல் நேரத்தில் ரூ.1000, ரூ்.2000 எனக் கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல். இது கடந்த நான்கரை வருடம் காயத்தை ஏற்படுத்திவிட்டு, கடைசியில் மருந்து தடவுவதைப் போன்றது.
ஸ்டாலினுக்குச் சொந்த புத்தியும் கிடையாது, சுய புத்தியும் கிடையாது. பிகாரில் சொன்னதைதான் செய்தார்கள். ஆனால் இங்கே ட்ராக் ரெக்கார்ட் (Track Record) சரியில்லை. இப்போது தேர்தல் நேரத்தில் அனுதாபம் தேடுவதற்காக, 'திட்டங்களை முடக்கப் பார்க்கிறார்கள்' என்று கூச்சல் போடுகிறார் ஸ்டாலின். இவரைத் தமிழக மக்கள் தான் முடக்குவார்களே தவிர வேறுயாரும் இல்லை. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு இன்று அமைதி இழந்துவிட்டது.

கஞ்சா புழக்கம், போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. எனவே, எல்லா இடத்திலும் தோல்வி ஆட்சியால் தி.மு.க-வின் இந்த கடைசி நேரச் சலுகைகள் வந்திருக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும், அ.தி.மு.க ஆட்சி அமைவது உறுதி. திமுக-வின் இந்த செயல்பாடு உள்நோக்கமுடையது." என்றார்.















