திருவள்ளூர், பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம்: 6 வாரம் வேண்டுதல் செய்ய நரம்பு பிரச்...
``மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார்'' - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மனோ தங்கராஜ்
1966 நவம்பர் 7-ம் தேதி பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனசங்கம் போன்ற அமைப்புகள், பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயன்றதாகவும், இதில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறி, அந்நாளை நினைவு கூரும் வகையில் கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து காமராஜர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
மேலும், மதவெறி கும்பலை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் கடந்த 7-ந்தேதி அமைச்சர் மனோ தங்கராஜ் கருப்பு சட்டை அணிந்து சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துள்ளார்.
கருப்பு சட்டை அணிந்து சென்று காமராஜரை மனோ தங்கராஜ் அவமானப்படுத்தியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
காமராஜர் நினைவகத்தை வழிபடும் ஆலயமாக நாங்கள் கருதி வருகிறோம். எனவே காமராஜரை அவமானப்படுத்திய மனோ தங்கராஜ் மீது மாவட்ட எஸ்.பி. தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும்.
காந்தி, அண்ணா, எம்.ஜி.ஆர்., காமராஜர் நினைவிடங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது. மனோ தங்கராஜ் மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும்.
கண்ட கண்ட (அச்சில் ஏற்றமுடியாத வார்த்தை) எல்லாம் காமராஜரை அவமதிக்க பா.ஜ.க. ஒருபோதும் அனுமதிக்காது.

அரசியல் ஆதாயத்திற்காக..
2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றன.
அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தரவேண்டும் என பா.ஜ.க.-விடம் மனோ தங்கராஜ் கேட்டார். அவருக்கு ஓட்டுப் போட கவுன்சிலர்கள் தயக்கம் காட்டினர்.
அப்போது அரசியல் ஆதாயத்திற்காக மனோ தங்கராஜ் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். நாளை ஆர்.எஸ்.எஸ். தயவு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அரசியல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ். சீருடையும் தொப்பியும் கூட அணிய அவருக்கு தயக்கம் இருக்காது.
`கைது செய்ய வேண்டும்'
காளிமலை கோவிலை வைத்து மறைமுகமாக மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார். காளிமலைக்கு அருகில் உள்ள மற்றொரு வழிபாட்டு தலத்தில் சப் கலெக்டர் அறிக்கையை மீறி சில பணிகள் செய்யச் சொல்லி அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார்.
அந்தப் பணிகள் நடைபெற்றால் கலவரம் ஏற்படும். மனோ தங்கராஜ் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார். இதைவிட கீழ்த்தரமான, மானங்கெட்ட மனிதன் யாராவது இருக்க முடியுமா? இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைகளை உடைத்து கடத்தலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி குமரி மாவட்டத்தில் அதிகமான செல்வாக்கு பெற வேண்டும் என்றால், மனோ தங்கராஜை தி.மு.க. தலைமை ஒதுக்கி வைப்பது நல்லது. தி.மு.க. கட்சிக்காரர்களே அவருக்கு எதிராக உள்ளதை தெரிந்து கொள்ள வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி தலைமை அனுமதித்தால், நான் போட்டியிடுவேன்.
போதைப்பொருள் கட்டுப்படுத்துவதில் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இன்னும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்,” என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.













