பொங்கல் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் தொடங்கிய ரயில் டிக்கெட் புக்கிங்...
‘22% ஈரப்பதம்’ நெல் கொள்முதல் எனும் தேசிய நாடகம்... கைதட்டும் தி.மு.க; கும்மியடிக்கும் பா.ஜ.க!
அனைவருக்கும் பசுமை வணக்கம்...
‘கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு... உதைக்கு அஞ்சலாமா’ என்கிற பழமொழி போல்தான் இருக்கிறது, உழவர்களின் வாழ்க்கை. நாட்டுக்கே படியளக்கும் தங்களை, ‘மக்களாட்சி’ என்கிற பெயரில் ஆண்ட/ஆண்டுகொண்டிருக்கிற மத்திய-மாநில ‘ராஜா’க்களை நம்பி நம்பி, மீண்டும் மீண்டும் உதைகளை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்- சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும்!
இதற்கு உடனடி சாட்சி, நெற்களஞ்சியமான காவிரி டெல்டா உட்பட மாநிலத்தின் பல பாகங்களிலும் அறுவடை செய்து மூட்டைக் கட்டப்பட்ட நெல் மணிகள், சமீபத்திய மழைக்கு முளைவிட்டு வீணாகிக் கிடப்பதுதான்.
‘போதுமான குடோன் வசதி, சாக்குகள், தார்ப்பாய்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்; 22% ஈரப்பதத்தில் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்; கொள்முதல் நிலையங்களில் நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்களை அமைக்க வேண்டும்’ என்றெல்லாம் காலகாலமாகவே கோரிக்கை வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், விவசாயிகள்.
போதுமான வசதிகளை செய்து தர வேண்டிய தமிழ்நாடு அரசு, அதையெல்லாம் சாமர்த்தியமாக மறைத்துவிட்டு, ‘22% ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும் நாடகத்தை வழக்கம்போல அரங்கேற்றியது. உடனே, ஓடோடி வந்த மத்திய அரசின் உணவுத்துறை அதிகாரிகள்... தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘ஆய்வு’ என்கிற பெயரில் நாடகத்தை நடத்தியிருக்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு நெல் உற்பத்தி ஆகும் என்று மத்திய, மாநில அரசுகளால் கணிக்க முடியும். அதேபோல, மழை மற்றும் வெயிலின் அளவு குறித்த வானிலை நிலவரத்தையும் முன்கூட்டியே கணிக்க முடியும். இதையெல்லாம் மனதில் கொண்டு போதுமான குடோன் வசதிகளை மாநில அரசு செய்திருக்க முடியும். 22% ஈரப்பதத்தில் கொள்முதல் செய்வதற்கு நிரந்தர உத்தரவை மத்திய அரசு வெளியிட்டிருக்க முடியும்.
இது எதையுமே செய்யாமல் தட்டிக் கழித்துவிட்டு, நெல் மூட்டைகளை மழையில் நனையவிட்டு முளைக்க வைப்பதும்; 17%-க்கு மேல் ஈரப்பதம் இருப்பதால் நெல்லை கொள்முதல் செய்ய முடியாது என்று விவசாயிகளைக் கண்ணீரில் ஆழ்த்துவதும்தான் தொடர்கிறது.
‘அதுதான் நாம் கடிதம் எழுதிவிட்டோமே’ என்று கைதட்டிக் கொண்டிருக்கிறது, மாநிலத்தை ஆளும் தி.மு.க அரசு. ‘நாம்தான் ஆய்வு செய்வதற்கு குழுவை அனுப்பிவிட்டோமே’ என்று கும்மியடித்துக் கொண்டிருக்கிறது, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு.
ம்... ‘நெல் மூட்டைகள் மழையில் நனைவது, விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணவுப் பிரச்னை. இது, நாட்டின் பொருளாதாரத்தையே சிதைத்துவிடும்’ என்பதையெல்லாம்கூட உணராத ஆட்சியாளர்களையே தொடர்ந்து தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பது, நம்முடைய தவறுதானே!
இனியாவது உணர்வோமா?!
- ஆசிரியர்

















