டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்! - 20 நாட்களில் 200 பணியா...
மம்தா கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் `தேசியவாத மக்கள் கட்சி' எனும் கட்சியில் இணைய முடிவு!
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக 60 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த ரிதப்ரதா அறிவிக்கப்பட்டுள்ளார். இப்போது மக்களவை எம்.பி.க்கள் 20 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளனர். அதோடு திரிபுராவில் இருந்து பெயரளவுக்கு செயல்படும் இந்திய தேசியவாத மக்கள் கட்சியுடன் (என்சிபிஐ) இணைவதாக 20 திரிணாமுல் எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்துள்ளனர்.
அதோடு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மக்களவையில் தனி இருக்கைகளை ஒதுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன் மூலம் மக்களவையில் என்சிபிஐ நான்காவது பெரிய கட்சியாக மாறி இருக்கிறது. ஹவுராவில் பதிவுசெய்யப்பட்ட என்சிபிஐ, இப்போது பாஜக (240), மற்றும் தெலுங்குதேசம்ம்(16) மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகியவற்றைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக மாறி இருக்கிறது.
எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தபோதிலும் அதிருப்தி கோஷ்டியினர் அடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன், சட்டத் தடைகளைத் தவிர்ப்பதற்காக திரிணாமுல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோருவதற்குப் பதிலாக, மற்றொரு கட்சியுடன் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' என்ற பெயரையும் அதன் சின்னத்தையும் உரிமை கொண்டாடும் திட்டத்தை கைவிடவில்லை என்று அதிருப்தி கோஷ்டி தெரிவித்துள்ளது.
இது குறித்து மம்தா பானர்ஜிக்கு ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த சுதீப் பந்தோபாத்யாய் கூறுகையில்,"மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் கட்சியில் இருந்து வெளியேறும் போது, முதல் நாளே அந்தக் கட்சியின் பெயரைக் கோர முடியாது.
திரிணாமுல் கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எங்களுக்கு இருப்பதால், ஜூலையில், எங்களுக்கு திரிணாமுல் (பெயர்) மற்றும் சின்னத்தை வழங்க கோரிக்கை வைப்போம். பின்னர் நீதிமன்றம் முடிவு செய்யும்," கூறினார். அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரை சந்தித்து பேசுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கீர்த்தி ஆசாத் மற்றும் சகாரிகா கோஷ் ஆகியோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்தனர்.
அதில் அதிருப்தி அணியின் தனி அணி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் அதன் சொந்த சட்டதிட்டங்களின் படி செயல்படவில்லை என்று அதிருப்தி கோஷ்டியினர் தெரிவித்துள்ளனர். கட்சியின் விதிகளை மீறி பல முடிவுகளை மம்தா பானர்ஜியும் அபிஷேக் பானர்ஜியும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார்கள் என்று அவர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
அதிருப்தி எம்.பி அருப் சக்ரவர்த்தி இது குறித்து கூறுகையில்,''முதல்முறை எம்.பியான சயோனி கோஷ் எங்கள் தலைவர். வங்காள முதல்வர் தலைமையில், எங்கள் இரட்டை எஞ்சின் அரசு தேசத்தின் நலனுக்காக உழைக்க விரும்புகிறது.... பாஜக எங்கள் உதவியைக் கேட்டால், நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். அவர்களின் உதவி தேவைப்பட்டால், நாங்கள் அதைக் கேட்போம்."என்று தெரிவித்தார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், எல்ஜேபி ஆகிய கட்சிகளின் முன்மாதிரிகளை பின்பற்றி திரிணாமுல் கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கட்சியில் இணைந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோருவது எந்த அளவில் சாத்தியமாக அமையும் என்று தெரியவில்லை. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் தனியாக வேறு எந்த கட்சியிலும் சேராமல் நேரடியாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.














