தத்தெடுத்த குழந்தைகள் பெரும்பாலும் உயிரோடு இல்லை; ஆனாலும்..! - பேரன்புக்காரார் ம...
மாநிலங்களவை உறுப்பினரான சரத் பவார்; கூட்டணிக் கட்சியினரை வீட்டுக்கு அழைத்து விருந்து!
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்த பிறகு, சரத் பவார் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. சமீபத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு உறுப்பினரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அந்த இடத்தில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்தது.
ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்று இருந்த சரத் பவார் இப்பதவிக்கு போட்டியிட எதிர்க்கட்சிகள் சம்மதித்தன. இதையடுத்து சரத் பவார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனவே சரத் பவார் தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களான உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நானா பட்டோலே, விஜய் ஆகியோரை தனது வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுக்கு விருந்து கொடுத்து கெளரவித்து, தன்னை மாநிலங்களவைக்குத் தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதோடு சரத் பவார் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து சரத் பவார் பேசுவது இதுவே முதன்முறையாகும். வரும் மே மாதம் சட்டமேலவையில் உத்தவ் தாக்கரேயின் பதவிக்காலம் முடிகிறது. மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாகும் 9 உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். அவர்களில் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
அந்த ஓர் இடத்திற்கு உத்தவ் தாக்கரேயை தேர்வு செய்வது குறித்து சரத் பவார் கூட்டிய விருந்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொள்ளவில்லை.















