குறுக்கே நிற்கும் இஸ்ரேல்: தள்ளிப்போகும் அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை
முதல்வரின் முகத்துக்கு நேராக திமுக எம்.எல்.ஏ சொன்ன அந்த வார்த்தை; சீறிய ஆதவ் - சலசலப்பான சட்டமன்றம்!
ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று சட்டமன்றத்தில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் முதல்வர் விஜய்யை நோக்கி வைத்த விமர்சனமும் அதற்கு அமைச்சர் ஆதவ் கொடுத்த பதிலும் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியது.

ஆளுநர் உரையைப் பற்றிய விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் தவெக அரசைப் பற்றியும் முதல்வர் விஜய்யை பற்றியும் பல விமர்சனங்களை முன்வைத்தார். அவரின் சில கருத்துகள் அவைக்குறிப்பிலிருந்தும் நீக்கப்பட்டன. ஆஸ்டின் பேசுகையில், 'பெண்கள் சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் என்ன நடந்தாலும் வாயே திறக்கமாட்டேன் என முதல்வர் சரித்திர புரட்சி செய்துள்ளார்' என முதல்வர் விஜய்யை நோக்கி கூறினார்.
உடனே எழுந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 'அவையின் மாண்புக்கு புறம்பாக தொடர்ந்து முதல்வரை கொச்சைப்படுத்தும் வகையில் திமுக உறுப்பினர் பேசிவருகிறார். எங்களின் கோபத்தை தூண்ட நினைக்கிறார். எப்போது பேச வேண்டுமென எங்களின் தலைவருக்கு தெரியும். கொளத்தூரில் 10 நிமிடம் பேசியதற்கே என்ன ஆனதென்று தெரியுமல்லவா?' என ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றினர்.

இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டதால் இருதரப்பு எம்.எல்.ஏக்களும் மாறி மாறி கூச்சல் போட்டு வசைபாடிக் கொண்டனர்.













