இடைத்தேர்தலுக்குத் தயாராகும் ஈரோடு, திருப்பூர்; மீண்டும் களமிறங்கும் அலுவலர்கள்!
மேகதாது: `திமுகவை போல தவெக வெற்று நாடகங்களை நடத்தக்கூடாது’ – வானதி சீனிவாசன்
பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “மேகதாது அணை திட்டம் என் இதயத்துக்கு நெருக்கமானது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன் என கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது, மேகதாது திட்டமானது, சம நிலை அணைத் திட்டம். அங்கு நீரைத் தேக்கினால் வறட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு நீரை எளிதாக திறந்து விடலாம் என்று தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்துள்ளார்.
காவிரி நதி பாயும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் அனுமதி இல்லாமல் கர்நாடகம் அணை கட்டக்கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். இதை மதிக்க வேண்டியது அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்ற முதலமைச்சர் சிவக்குமாரின் கடமையாகும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று அவர் பேசிக் கொண்டிருக்கிறார். மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டினால், இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் உபரி நீரும் வராது. தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும்.

எனவே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள த.வெ.க. அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க. கூட்டணி அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் நம் கூட்டணி கட்சி தானே ஆட்சி செய்கிறது, அவர்களை எப்படியாவது ஏமாற்றி மேகதாதுவில் அணை கட்டி விடலாம் என்று சிவகுமார் நினைக்கிறார். ஆனால் காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு, அமைச்சர் பதவியும் கொடுத்து, கொஞ்சி குலாவிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், மேகதாது அணை பிரச்சினையில் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். இது தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும்.
எனவே, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்து மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று டி.கே. சிவகுமாருக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்த வேண்டும். பெரும்பான்மை இல்லாத போதும், ஆட்சி அமைப்பதிலும், ஆட்சியை தக்க வைக்க இப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் வேகத்தையும், திறமையையும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் பயன்படுத்த வேண்டும்.
வெறுமனே மத்திய அரசுக்கு கடிதம், கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை, சட்டமன்றத்தில் தீர்மானம் என்று கடந்த கால தி.மு.க அரசைப் போல வெற்று நாடகங்களை நடத்திக் கொண்டிருக்காமல், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாது அணை பிரச்சினையில் த.வெ.க. அரசின் செயல்பாடு தமிழகத்தின் நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கர்நாடக காங்கிரஸ் அரசிடம் மென்மையான அணுகுமுறையை ஒருபோதும் கையாளக் கூடாது. அப்படி செய்தால் வரலாறு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஒருபோதும் மன்னிக்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.













