நீட் நுழைவுத்தேர்வு: 'அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படுமா?'- அமைச்சர் தர்ம...
முதல்வர் டு எதிர்க்கட்சி தலைவர் டு முதல்வர்! - கேரளாவில் ஒரே நாளில் வந்த அறிவிப்பு!
கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசனை முதலமைச்சராக காங்கிரஸ் நேற்று தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சராக இருந்த பினராயி விஜயனை எதிர்க்கட்சித் தலைவராக சி.பி.எம் தேர்வு செய்துள்ளது.
சி.பி.எம் மாநிலக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்தலில் பின்னடைவு ஏற்பட்ட போதிலும், பினராயி விஜயன் எதிர்க்கட்சியை வழிநடத்தட்டும் என்று சி.பி.எம் மாநிலக் குழு ஒருமனதாக முடிவு எடுத்தது.
இதற்கான அறிவிப்பை சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் வெளியிட்டார். பினராயி விஜயன் எதிர்க்கட்சித் தலைவராவது இதுவே முதல் முறையாகும். இ.கே.நாயனார் அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த பினராயி விஜயன், சி.பி.எம் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டபோது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் அவர் முதலமைச்சராக ஆனார்.

கேரளத்தில் எதிர்க்கட்சித் தலைவரை முதலமைச்சராகவும், முதலமைச்சரை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஒரே நாளில் அறிவித்தது பேசுபொருள் ஆகியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனுக்கும் முதல்வராக இருந்த பினராயி விஜயனுக்கும் இடையே சட்டமன்றத்தில் பலமுறை அனல் பறக்கும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்த வார்த்தைப் போர் இனியும் சட்டசபையில் தொடரும் என்பது உறுதியாகி உள்ளது. நீண்ட கால அரசியல் அனுபவமும், கூர்மையான வார்த்தைகளுமே பினராயி விஜயனின் பாணி. ஆழமான வாசிப்பு மூலம் பெற்ற தரவுகளின் அடிப்படையில், உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் திறனுமே வி.டி.சதீசனின் பலம்.

கேரள சட்டமன்றக் கூட்டத்தொடர்களில் இருவரும் மோதிக் கொண்ட பல விவகாரங்கள் இன்னும் முடிவுபெறவில்லை. அதே நேரத்தில், மிகக் கூர்மையாகப் பேசக்கூடிய திறமை கொண்ட சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த பி.ராஜீவ், எம்.பி. ராஜேஷ் போன்றவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இல்லை. காங்கிரஸ் வரிசையில் கே.முரளிதரன், வி.டி.பல்ராம் மற்றும் மேத்யூ குழல்நாடன் போன்றவர்களின் குரல் பலமாக ஒலிக்கும் என்பது காங்கிரஸுக்கு பலமாக அமையும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

















