பாலக்கோடு: கே.பி.அன்பழகனுக்கு டாக்டர் செந்தில்குமாருக்குப் போட்டி எப்படி இருக்கு...
மும்பை: தமிழ் மூதாட்டியிடம் டிஜிட்டல் மோசடி; ரூ.33 லட்சம் பறித்த குஜராத் கிரிக்கெட் வீரர் கைது
மும்பை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. வங்கிகளில் அதிக பணம் இருப்பவர்களைக் குறிவைத்து இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
இது போன்ற டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அதிக அளவில் குஜராத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
குஜராத்தைச் சேர்ந்த ரஞ்சிப்போட்டியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஒருவரே இது போன்ற டிஜிட்டல் கைது குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். மும்பை கோரேகாவ் பகுதியைச் சேர்ந்த தமிழ் மூதாட்டி ஒருவரைக் கடந்த பிப்ரவரி மாதம் ஒருவர் போனில் தொடர்பு கொண்டார்.

அந்த நபர் தமிழ் பேசுபவராக இருந்தார். போனில் பேசியவர் தன்னை சென்னை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்றும், உங்களது சிம்கார்டு தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவன் பயன்படுத்தியதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி வழக்கு எண் ஒன்றைக் கொடுத்து உங்களை உயர் அதிகாரி தொடர்பு கொள்வார் என்று கூறி போனை வைத்துவிட்டார். அதன் பிறகு போனில் பேசிய நபர், மூதாட்டியிடம் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து மும்பைக்குச் சென்று இருக்கிறீர்கள் என்றும், உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் யார் என்று எனக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.
அதோடு எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று கூறி போலீஸில் ஒரு தடையில்லா சான்று வாங்குங்கள் என்று கூறி மூதாட்டியின் போனை தீவிரவாத தடுப்புப் படை அதிகாரிக்கு டிரான்ஸ்பர் செய்தார்.
அதன்பிறகு, ஒருவரிடமிருந்து வீடியோ கால் வந்தது. அதில் பேசிய நபர் ஆங்கிலத்தில் பேசினார். அவருடைய WhatsApp காட்சிப் படம் “ATS லோகோ” என்று இருந்தது. அந்த நபர் போலீஸ் சீருடை அணிந்து அவருக்கு முன்னால் பல கோப்புகளுடன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஒவ்வொரு அறையையும் பார்க்கவும், குடும்பம் மட்டுமே வீட்டில் இருப்பதை உறுதிப்படுத்தவும், வீட்டைச் சுற்றி போனை எடுத்துச் செல்லும்படி அவர் மூதாட்டியிடம் கூறினார்.
அடுத்து மூதாட்டியிடம் Arattai செயலியைப் பதிவிறக்கம் செய்து, சில தனியுரிமை அமைப்புகளை மாற்றும்படி கேட்டுக் கொண்டார். நோட்டீஸ், எஃப்.ஐ.ஆர், கைது வாரண்ட் மற்றும் ரகசிய ஒப்பந்தம் போன்ற சில ஆவணங்கள் மூதாட்டிக்கு அனுப்பினர்.
அதோடு உங்களது மகன் பெர்லினில் இருப்பது தங்களுக்குத் தெரியும் என்றும், மும்பை திரும்பியதும் அவரைக் கைது செய்வோம் என்றும் போனில் பேசிய மோசடிக்காரர்கள் கூறினர். இதனைக் கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து தாங்கள் உங்களைக் கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.
பிப்ரவரி 11 மற்றும் 16-க்கு இடையில், மூதாட்டிக்கு மோசடிகாரர்களிடமிருந்து பல அழைப்புகள் வந்தன. அவரது மகனைக் கைது செய்யாமல் இருக்க மூதாட்டியின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தைத் தாங்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு அனுப்பும்படியும், அதனை ரிசர்வ் வங்கி சரிபார்த்த பிறகு அது சட்டப்பூர்வ பணம் என்றால் திரும்ப கொடுத்துவிடுவோம் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து மூதாட்டி தனது வங்கிக்கணக்கில் இருந்து மொத்தம் ரூ. 32.7 லட்சத்தை அவர்களுக்கு மாற்றினார்.
பிப்ரவரி 16 அன்று, அவரது மகன் பெர்லினில் இருந்து வீடு திரும்பினார். அவர் தனது தாயார் மோசடி செய்யப்பட்டதை அறிந்து இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி குஜராத்தைச் சேர்ந்த ரிஷி, ஹார்ஷ், நிகில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ரிஷி ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது தந்தை பயிற்சியாளராக இருக்கிறார்.

















