ரூ.60 கோடி சொத்து; வாரிசு இல்லாமல் விட்டுச்சென்ற பெண் டாக்டர் - உரிமை கோரி முட்ட...
மும்பை ரயில் தண்டவாளத்தில் பட்டப்பகலில் போர்வை மூடி உறங்கிய போதை ஆசாமி! - ரயில் சேவை பாதிப்பு
மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ரயில் மட்டுமல்லாது மும்பை ரயில் நிலையங்களிலும் காலை, மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மத்திய ரயில்வே புறநகர் ரயில்களை இயக்கி வருகிறது.
நேற்று மாலை 3 மணிக்கு பன்வெலில் இருந்து புறநகர் ரயில் ஒன்று சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குள் நுழைய வந்தது. ஆனால் ரயில்வே ஸ்டேசனில் பிளாப்பாரம் தொடங்கும் இடத்தில் ரயில் தண்டவாளத்தில் ஒருவர் வெள்ளை துணியை மூடியபடி படுத்திருந்தார்.
பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் தண்டவாளத்தில் படுத்திருந்தவரை எழுந்திருக்கும்படி கூறி கத்தி கூச்சலிட்டனர். ஆனால் அதனைப்பற்றி கவலைப்படாமல் அந்த நபர் நிம்மதியாக படுத்திருந்தார்.

இதனை தூரத்தில் இருந்தே கவனித்த ரயில்வே மோட்டார்மென் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் மீது ரயில் ஏறுவதற்குள் ரயிலை பிரேக் போட்டு நிறுத்தினார். அவரது தலை அருகில் ரயில் வந்து நின்றது. சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் துணி மூடிபடுத்திருந்த நபரை துணியை நீக்கி பார்த்தபோது அந்த நபர் போதையில் உறங்கிக்கொண்டிருந்தார்.
அவரை எழுப்பியபோது அவரால் குடிபோதையில் எழுந்திருக்க முடியவில்லை. ரயில்வே போலீஸார் அவரை சம்பவ இடத்தில் இருந்து போராடி இழுத்துச்சென்றனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரத்திற்கும் மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பட்டப்பகலில் எப்படி அவர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி படுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பையில் தினமும் புறநகர் ரயில்களில் இருந்து விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு 10 பேர்வரை உயிரிழந்து வருகின்றனர்.










.png)








