`விளையாட்டா? அரசியலா?' - உலகக் கோப்பையில் 'ஒடுக்கப்படும் அணி' என ஆதங்கம் தெரிவிக...
'ரூ.15 கோடிக்கு விலைபோனர்களா?' - ஷிண்டேயின் சிவசேனாவில் சேரும் 6 உத்தவ் கட்சி MP-க்கள்
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு மக்களவையில் 9 எம்.பி.க்கள் இருக்கின்றனர். அவர்களைத் தங்களது பக்கம் இழுக்க துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தொடர்ந்து ஆப்ரேசன் டைகர் என்ற பெயரில் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
அவர்களது முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்து இருக்கிறது. மொத்தமுள்ள 9 எம்.பி.க்களில் 6 பேர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்குச் செல்ல முடிவு செய்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து உத்தவ் தாக்கரே கூட்டும் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தவ் தாக்கரே கூட்டியிருந்த கூட்டத்தில் 4 எம்.பி.க்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தற்போது 6 எம்.பி.க்கள் தங்களது மொபைல் போனை ஆப் செய்துவிட்டு டெல்லிக்குச் சென்றுவிட்டனர். அவர்களைச் சந்தித்துப் பேச ஏக்நாத் ஷிண்டேயும் இன்று டெல்லி செல்ல இருக்கிறார்.

அவர் 6 எம்.பி.க்களையும் சந்தித்துப் பேசிய பிறகு 6 பேரும் மக்களவைச் சபாநாயகரை நேரில் சந்தித்து தங்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் அவையில் இருக்கைகளை ஒதுக்கும்படியும், தங்களை சிவசேனா உறுப்பினர்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரி கடிதம் கொடுக்க இருக்கின்றனர்.
கடைசி முயற்சியாக அவர்களைத் தடுத்து நிறுத்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் மற்றும் அனில் தேசாய் ஆகியோரும் டெல்லிக்குச் சென்றுள்ளனர். சஞ்சய் ராவுத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், மகாராஷ்டிரா எம்.பி.க்கள் தலா ரூ.15 கோடிக்குப் பேரம் பேசப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தவ் தாக்கரே கட்சியின் பர்பானி தொகுதி எம்.பி. சஞ்சய் ஜாதவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் மற்றும் அவரது தொகுதிக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேபோல, ஹிங்கோலி தொகுதி எம்.பி. நாகேஷ் பாட்டீல் அஷ்டிகருக்கும் அவரது தொகுதிக்கு நிதி மற்றும் 2029-ல் மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு (டிக்கெட்) வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஓம்ராஜே நிம்பல்கரும் அணி மாற முடிவு செய்து டெல்லிக்குச் சென்றுள்ளார்.

தாக்கரேவின் கட்சியில் எதிர்காலம் இல்லை என்று கருதுவதால், ஷிர்டி நாடாளுமன்ற உறுப்பினர் பாவ்சாகேப் வாக் சௌரே, ஷிண்டே சேனாவுடன் இணைய முடிவு செய்துள்ளதாக சேனா நிர்வாகிகள் தெரிவித்தனர். இது குறித்து சிவசேனா அமைச்சர் சிவசேனா அமைச்சர் பிரதாப் சர்னாயக் கூறுகையில், "எங்கள் டைகர் ஆப்ரேசன் எப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தற்போது தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த எந்தவொரு எம்.பி.யும் எங்களுடன் தொடர்பில் இல்லை.
ஆனால், சிவசேனாவில் இணைய விரும்பும் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் கட்சியில் சேர நல்ல வாய்ப்பு உள்ளது," என்று தெரிவித்தார்.
ஆனால் ஏக்நாத் ஷிண்டே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.ருபால் டுமானே இது குறித்து கூறுகையில், "ஆப்ரேசன் டைகர் திட்டத்தின் கீழ் உத்தவ் தாக்கரே அணியில் இருக்கும் 7 எம்.பி.க்களை எங்களது பக்கம் இழுப்பதற்கான பணி இறுதிக்கட்டத்தை நெறுங்கி இருக்கிறது. அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது முதலில் பரிசோதனைகள் செய்யப்பட்டு அறிக்கைகள் பெறப்படுவது போல இப்போது மருத்துவரிடம் அதற்கான இறுதித் தேதியை மட்டும் முடிவு செய்ய வேண்டியுள்ளது.
அந்த நாளில் அறுவை சிகிச்சை நடைபெறும். இது மழைகாலக் கூட்டத்தொடருக்கு முன்பாகவே நடக்கும். எல்லா விவரங்களையும் பகிர்ந்துகொள்வது சரியாக இருக்காது. ஆனால் அவர்கள் எங்களுடன் இணைவது ஏறக்குறைய உறுதி. இந்த விவாதங்கள் ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன. இன்று அவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன," என்று கூறினார்.




















