``விக்ரம் வேதா, கைதி வரிசையில் சர்தார் 2..." - தன் 100வது படம் குறித்து இசையமைப்...
``விக்ரம் வேதா, கைதி வரிசையில் சர்தார் 2..." - தன் 100வது படம் குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில், ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ், ``பல வருடங்கள், பல போராட்டங்களைக் கடந்து என்னுடைய 100-வது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் நிற்கிறேன் என்பதை நினைக்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்.
நான் கடந்து வந்த பாதையில் நிறைய நன்மைகளும் சவால்களும் இருந்திருக்கின்றன. மிகவும் உற்சாகமாகவும் அதே சமயம் மனதிற்குள் ஒரு எமோஷனலான உணர்வோடும் இருக்கிறேன்.
வழக்கமாக இசை வெளியீட்டு விழாக்களுக்கு நான் மிகவும் ஜாலியாக வருவேன். ஆனால் இந்த 100-வது பட விழா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் தருணத்தில் என்னோடு பயணித்த, எனக்கு உதவிய திரைப்படம் சார்ந்த மனிதர்கள், சொந்தங்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 99 படங்களாக நீங்கள் எனக்குக் கொடுத்த ஆதரவு மிகப்பெரிது. எனது பின்னடைவுகளின் போதும் ரசிகர்கள் அனைவரும் என் கூடவே இருந்திருக்கிறீர்கள். இந்த 100-வது படம் என்ற மைல்கல், நான் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்குவதற்கான பெரிய ஊக்கமாக இருக்கும். சர்தார் 2 திரைப்படம் எனது 100-வது படமாக அமைந்தது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு.
இயக்குநர் மித்ரன் எனக்கு நீண்டகால நண்பர், மிகவும் திறமையானவர். கார்த்தி சாருடன் நான் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல இந்த சர்தார் 2 திரைப்படமும் ஒரு சிறந்த ஸ்பை த்ரில்லராக அமைந்திருக்கிறது.
தமிழுக்கு ஏற்ப ஒரு பிரமாண்டமான ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. முதல் பாகத்திற்கு ஜி.வி. பிரகாஷ் அருமையான இசையைக் கொடுத்திருந்தார். அந்த வரிசையில் இந்த இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்கும் போது அதன் தரத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
ஜி.வி. பிரகாஷ் அவர்களுடனும் பேசி, முதல் பாகத்தின் சில முக்கிய தீம் இசைகளை இதிலும் பயன்படுத்தியிருக்கிறோம். அவர் மிகவும் ஆதரவாக இருந்தார். விக்ரம் வேதா, கைதி படங்கள் எப்படி இசையமைப்பில் பேசப்பட்டதோ, அதேபோல் இந்தப் படமும் பேசப்படும்.
இதற்காக புடாபெஸ்ட் நகரில் லைவ் ஆர்கெஸ்ட்ரா மற்றும் பல கலைஞர்களுடன் இணைந்து மிகக் கடுமையாக உழைத்திருக்கிறோம். 100 என்பது வெறும் எண் தான், இன்னும் நிறைய கற்றுக்கொண்டு அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான சிறந்த இசையைத் தொடர்ந்து வழங்குவேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














