Gold: ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு! மீண்டும் லைம்லைட்டில் தங்கம்; விலை ஏறுவது ஏன்?
``வேளாண் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் இல்லை"- சௌமியா அன்புமணி
சட்டமன்றத்தில் பாமக உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசுகின்ற விஷயங்களும் அதை வெளிப்படுத்துகின்ற முறையும், அனைவராலும் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக அவர் பேசிய விதம், சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்றையக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் சௌமியா அன்புமணி பேசும்போது, "சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்த அரசுக்கு வாழ்த்துகள். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற பாமக 13 வருடங்களாக குரல் கொடுத்து வருகிறது. வேளாண் துறைக்கு வெறும் 16,000 கோடி ரூபாய்தான் ஒதுக்கி உள்ளீர்கள், இது மிகவும் குறைவு. வேளாண் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் இல்லை.
ரூ.56,985 கோடி மூலதன செலவினங்களுக்கு ஒதுக்கி உள்ளீர்கள். ஆனால் முக்கியமான நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெய்யும் மழை நீர் எல்லாம் வீணாக கடலில் கலக்கிறது. 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும்... அவ்வாறு கட்டினால்தான் தண்ணீரை சேமிக்க முடியும்.

தருமபுரிக்கு இரண்டு டி.எம்.சி நீரும், சேலத்திற்கு 5 டி.எம்.சி நீரும் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் 35 பெரிய ஆறுகள் இருக்கின்றன. அவற்றில் தடுப்பணை கட்டினால் கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியும். இதன் மூலம் 100 டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும்.
தமிழ்நாட்டில் 42,000 ஏரிகள் இருந்தன. தற்போது 27,000 ஏரிகள் மட்டும்தான் உள்ளன. இவற்றை தூர்வாரினால் மட்டுமே 150 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் மானியங்கள் முறையாக தங்களுக்கு வந்து சேரவில்லை என்று அரசு அதிகாரிகளின் மீது விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு இல்லை. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து விட்டு வெளியே வருகிறார்கள், அவர்கள் எதிர்பார்ப்பது அரசு வேலைதான்.
3000 அரசுப் பணிக்கு, 30,000 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 10 ஆண்டுகளாக தேர்வு எழுதுகிறார்கள். இருப்பினும் வேலை கிடைக்கவில்லை. தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்ட பின்னும் வேலை கிடைக்கவிக்லை, அரசு வேலை என்பது கானல் நீராகத்தான் உள்ளது.
அரசாணை 152-ன் படி சென்னை மாநகராட்சி தவிர மீதி உள்ள 20 மாநகராட்சிகளில் பணிகள் இல்லை. அனைத்துப் பணிகளும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
479 பேரூராட்சிகளில் அவுட் சோர்சிங் மூலமாகத்தான் பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. 35,000 அரசுப் பணிகள் காலியாகி உள்ளது. கிட்டத்தட்ட 52,000 பணிகள் இந்த அரசாணை மூலமாக போய்விட்டது. ஒப்பந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். உழைப்பு சுரண்டப்படுகிறது. சமூக நீதிக்கு இடமே இல்லை. வேலைவாய்ப்பில் குத்தகை முறையை ஒழித்து விட வேண்டும். அப்படி ஒழித்தால்தான் இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும், மனித உரிமை பாதுகாக்கப்படும்.
தனியார் நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான கொள்கை முடிவை தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், அன்புமணி அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார்.
சமூக நீதி கணக்கெடுப்பு, கூட்டுறவு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி பெண்களின் மகிழ்ச்சி உறுதி செய்ய வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
காவிரி - தருமபுரி உபரி நீர் திட்டத்தை தயவு செய்து மறந்து விடாதீர்கள். தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீரை கொண்டு வாருங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள்." என்று பேசினார்.


















