IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில்...
`அதிமுக ஆட்சியாக இருந்தால் `ஜனநாயகன்' படம் எப்போதோ வெளியாகியிருக்கும்!' - சொல்கிறார் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட த.வெ.க-வினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர் அப்போது பேசிய கடம்பூர் ராஜூ, “2026 தேர்தல் களத்தின் வெற்றி, அ.தி.மு.க-வை நோக்கி இருக்கிறது. மழைக்காலத்தில் தோன்றும் வானவில் பார்க்க அழகாகத் தெரியும். ஆனால், சில மணி நேரங்களில் சூரிய ஒளிபட்டு கண்ணுக்குத் தெரியமால் போய்விடும். வரும் தேர்தலில் வானவில்லும், சூரியனும் போய் விடும். வந்த வேகத்தில் மறையும் வானவில் போல்தான் தமிழக வெற்றிக் கழகமும்.

அதே வேகத்தில் மறையும். தி.மு.க என்றைக்கும் தீய சக்திதான். அவர்கள் செய்த ஒரே ஒரு புண்ணியம் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கியதுதான். எம்.ஜி.ஆர் - விஜய் படங்களை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். எம்.ஜி. ஆர், தனது திரைப்படத்தில் மது, புகைப்பிடித்தல் காட்சிகளை தவிர்த்து இளைஞர்களை நல் வழிப்படுத்தினார். ”மெர்சல்” திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைக்காமல், ”ஜனநாயகன்” திரைப்படம் இன்று முடங்கி இருப்பது போல் முடங்கும் நிலை அன்று இருந்தது.
தம்பி விஜய், என் மூலமாகத்தான் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை. 3 மணி நேரம் காத்திருந்து அன்று இரவோடு இரவாக அந்த திரைப்படத்திற்கு தேவையான சான்றிதழ் வாங்கிக் கொடுத்து மெர்சல் திரைப்படத்தை வெளியிட வைத்தோம். அப்போது அவர், `நான் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டு இருப்பேன்' என்று கூறினார்.

அதை அவர் மறந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க பெயரை சொல்லமால் தவிர்க்கிறார். காரணம் அ.தி.மு.கவின் மீதான பயம்தான். சர்க்கார் படத்தில் ஒரு வாக்கு போடமுடியமால் அரசியல் கட்சி தொடங்கியது போல நினைக்கிறார். இன்றைக்கு தி.மு.க-வை தீய சக்தி, அரசியல் எதிரி என்று கூறும் விஜய், கடந்த தேர்தலின் போது, என்ன கலர் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என்பது மக்கள் அனைவருக்குமே தெரியும். அன்றைக்கு தி.மு.க அரசியல் எதிரி என்று தெரியவில்லையா? நேரத்திற்கு நேரம் அரசியலில் கொள்கை மாற்றுபவர்கள் வெற்றி பெற முடியாது.
இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் என்னுடைய நண்பர்தான். அவருக்கு கள நிலவரம் தெரியும். ஆனால், அவர் சொல்வதை கேட்கும் நிலையில் விஜய் இல்லை. எம்.ஜி.ஆர் போல் தனது பெயரில் மூன்றெழுத்து இருக்கிறது என்று தம்பி விஜய் நினைத்துக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் விஜய் டான்ஸ் ஆடியது மூலமாக மீண்டும் டான்ஸ்தான் ஆடுவேன் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தினர் களத்திற்கு வருவதற்கு முன்பே நம்முடன் இணைந்து அரசியல்களத்திற்கு வந்துவிட்டனர். இதுதான் க்ளைமேக்ஸ். அ.தி.மு.க தற்போது ஆட்சியில் இருந்தால் ஜனநாயகன் திரைப்படம் எப்போதோ வெளிவந்திருக்கும். விஜய் தொடங்கி உள்ளது வெற்றிக் கழகம் இல்லை... அது ஒரு வெற்றுக் கழகம், அ.தி.மு.க-தான் உண்மையான வெற்றிக் கழகம். தம்பி விஜய்க்கு அரசியல் வேண்டாம்" என்றார்.
















