’திரையரங்குகளில் அமைச்சர்கள் கண்ணீர் விட்டது ஏன்?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்...
அப்பாவின் நம்பிக்கை... மகளின் உழைப்பு... NEET-ல் வெற்றிக் கதை எழுதிய சந்தியா!
NEET... இந்த நான்கு எழுத்து தேர்வு, லட்சக்கணக்கான மாணவர்களின் கனவையும், பல வருட உழைப்பையும் சோதிக்கும் ஒரு பெரிய பயணம். இந்த பயணத்தில் வெற்றி என்பது வெறும் மார்க் மட்டும் கிடையாது; தன்னம்பிக்கை, விடாமுயற்சி, குடும்பத்தின் நம்பிக்கை என எல்லாம் சேர்ந்த ஒரு சாதனை.
அப்படிப்பட்ட ஒரு ஊக்கமான வெற்றிக் கதையைத்தான் இந்த முறை பார்க்கப் போகிறோம். திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி சந்தியா, NEET தேர்வில் 720-க்கு 571 மதிப்பெண்களும், CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 461 மதிப்பெண்களும் பெற்று, அரசு மருத்துவக் கல்லூரி இருக்கையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்தது இரவு முழுக்க செய்த கடின உழைப்பு, அம்மாவின் கனவை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதி, அப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்தப் பயணத்தை நம்மோடு மனம் திறந்து பகிர்ந்திருக்கிறார் சந்தியா.
"ரிசல்ட் வந்ததும் வீட்டுல எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எங்களுக்கு அது ஒரு பெரிய பரிசு கிடைச்ச மாதிரி இருந்துச்சு. நாங்க எதிர்பார்த்த மாதிரியே நல்ல ரிசல்ட் வந்ததால எல்லாரும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாங்க," என்று புன்னகையுடன் சொல்கிறார்.
தன்னுடைய குடும்பத்தைப் பற்றி பேசும்போது, "எங்க அப்பா தினசரி தொழில் பண்றாங்க. அம்மா இப்போ இல்லை. அப்பா அதிகம் படிக்கல. ஆனா என் மேல அவங்க வைத்திருந்த நம்பிக்கையும், கொடுத்த ஊக்கமும்தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துச்சு," என நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.

டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு எப்படி உருவானது என்ற கேள்விக்கு, "டாக்டர் ஆகணும்னு முதல்ல ஆசைப்பட்டது எங்க அம்மாதான். 'உன்னால முடியும்'ன்னு எப்போதும் எனக்கு தைரியம் கொடுத்தாங்க. அவங்க கனவை நிஜமாக்கணும்னு நினைச்சுதான் அதையே என்னோட கனவாவும் மாற்றிக்கிட்டேன்," என்று கூறுகிறார்.
தனது படிப்பு முறையைப் பற்றி, "எல்லாரும் தூங்குன பிறகு இரவு 12 மணி முதல் காலை 7 மணி வரை படிப்பேன். அந்த நேரம் ரொம்ப அமைதியா இருக்கும். அதனால முழு கவனத்தோட படிக்க முடியும்," என்கிறார்.
NEET தேர்வுக்கான தயாரிப்பு குறித்து, "முதல்ல தன்னம்பிக்கை வேண்டும். ஆரம்பத்துல எனக்கும் சந்தேகம் இருந்துச்சு. ஆனா அப்பா கொடுத்த நம்பிக்கையால அதை கடந்து வந்தேன். நான் பெரும்பாலும் NCERT புத்தகங்களைத்தான் படிச்சேன். அதையே திரும்பத் திரும்ப ரிவிஷன் பண்ணினதுதான் எனக்கு ரொம்ப உதவுச்சு," என்று கூறுகிறார்.
தனது பள்ளி குறித்து, "திருநெல்வேலி காந்திநகர்ல இருக்குற லிட்டில் பிளவர் பப்ளிக் ஸ்கூல்லதான் 2-ம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை படிச்சேன். எக்ஸ்ட்ரா கிளாஸஸ், ரெகுலர் டெஸ்ட்ஸ், லைப்ரரி வசதி, செல்ஃப் ஸ்டடிக்கான கைடன்ஸ் என எல்லா விதத்திலும் ஸ்கூல் ரொம்ப சப்போர்ட் பண்ணுச்சு. அந்த பயிற்சிதான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்," என்கிறார்.
மருத்துவக் கல்லூரி குறித்த தனது எதிர்பார்ப்பை பகிர்ந்த அவர், "சென்னை மண்டலத்துல இருக்குற அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒரு கல்லூரி கிடைக்கணும்னு ஆசை. இல்லன்னா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கிடைச்சாலும் ரொம்ப சந்தோஷம். என்னோட மார்க்குக்கு அரசு மெரிட் சீட் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கு," என்கிறார்.
தேர்வை எப்படி அணுக வேண்டும் என்ற கேள்விக்கு, "நமக்கு நல்லா வரும்ங்கிற பாடங்களை முதல்ல முடிச்சிடணும். அதுக்கப்புறம் வீக்கா இருக்குற பகுதிகள்ல அதிக கவனம் செலுத்தணும். பிரஷர் எடுத்துக்காம, தன்னம்பிக்கையோட தேர்வு எழுதினா நல்ல மார்க் எடுக்க முடியும்," என்று மற்ற மாணவர்களுக்கும் பயனுள்ள அறிவுரையை பகிர்கிறார்.

தனது வெற்றிக்கு காரணம் யார் என்ற கேள்விக்கு, "எங்க அப்பா, குடும்பத்தினர், என்னோட தங்கைகள்... எல்லாரும் என்னை நம்பினாங்க. அந்த நம்பிக்கையும், அவங்க கொடுத்த மன உறுதியும்தான் இந்த வெற்றிக்கு காரணம்," என்று பெருமையுடன் கூறுகிறார்.
இறுதியாக NEET தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அவர் கூறிய ஒரு முக்கியமான செய்தி, "கடினமா உழையுங்க... ஆனா அதைவிட முக்கியம், 'என்னால முடியும்'ன்னு உங்களை நீங்களே நம்புங்க. அந்த தன்னம்பிக்கை இருந்தா வெற்றி கண்டிப்பா உங்களுக்குத்தான்."
அம்மாவின் கனவை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியும், அப்பாவின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வும், அதோடு விடாமுயற்சியும் சேர்ந்ததால்தான் இன்று இந்த வெற்றியை சந்தியா எட்டியிருக்கிறார்.




















