விளாச்சேரி டு அமெரிக்கா... களிமண்ணில் உருவாகும் ஒரு கிராமத்தின் கனவு!
அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்... இன்டர்ன்ஷிப்பிற்கு ‘சி.பி.டி’ புதிய கட்டுப்பாடுகள்!
அமெரிக்காவில் எஃப்-1 (F-1) விசாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பு அனுமதியான சி.பி.டி (Curricular Practical Training - CPT) விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், விருப்பப் பாடங்கள் (Elective courses) மூலம் சி.பி.டி பெற்று வந்த மாணவர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
சி.பி.டி என்றால் என்ன?
சி.பி.டி என்பது எஃப்-1 விசா பெற்று அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் கல்வித் திட்டத்துடன் தொடர்புடைய இன்டர்ன்ஷிப் அல்லது பயிற்சி வேலைகளில் ஈடுபட வழங்கப்படும் அனுமதியாகும். இதன் மூலம் மாணவர்கள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற முடியும். F-1 என்பது அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான மாணவர் விசா.

புதிய கட்டுப்பாடுகளின் பின்னணி
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி மற்றும் விசா விதிகளைக் கண்காணிக்கும் எஸ்.இ.வி.பி (SEVP) அமைப்பு, தற்போது சி.பி.டி பெறுவதற்கான நடைமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, இன்டர்ன்ஷிப் என்பது அந்த மாணவர் படிக்கும் பட்டப்படிப்பின் கட்டாயப் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மாறாக, மாணவர் தன் விருப்பப்படி தேர்வு செய்யும் ‘எலக்டிவ்’ பாடத்தின் மூலம் மட்டும் சி.பி.டி பெற்று இன்டர்ன்ஷிப் செய்யும் முறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் நடவடிக்கை
இந்த திடீர் மாற்றத்தால், இன்டர்ன்ஷிப் கட்டாயமாக்கப்படாத கல்விப் பிரிவுகளில் சேரும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UC Berkeley), யூ.சி. டேவிஸ் (UC Davis), வாஷிங்டன் பல்கலைக்கழகம் போன்ற பல முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சில வகையான சி.பி.டி விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மறுஆய்வு செய்து வருகின்றன.
இந்திய மாணவர்களுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் இன்டர்ன்ஷிப் மூலம் அங்குள்ள நிறுவனங்களில் பணி அனுபவம் பெறும் வாய்ப்புகள் இதன் மூலம் குறையலாம். எனினும், சி.பி.டி முறை முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. பட்டப்படிப்பு முடிக்கக் கட்டாயமாகத் தேவைப்படும் இன்டர்ன்ஷிப் அல்லது செய்முறைப் பயிற்சிக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட சி.பி.டி அனுமதிகள் வழக்கம்போலச் செல்லுபடியாகும் என்றும் பல்கலைக்கழகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.





















