"அம்மா, அப்பா சாரி... தவறான முடிவை எடுக்கிறேன்" - நீட் தேர்வு பயத்தால் மாணவர் வி...
"அமைச்சர் ராஜ்மோகனுக்கு மிரட்டல்" - பத்திரிகையாளர் மன்ற நிகழ்ச்சியைப் புறக்கணித்தாரா ராஜ்மோகன்?
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ் மோகன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக வெளியான செய்தி பேசுபொருளாகியிருக்கிறது.
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த பத்திரிகையாளர்களின் பிள்ளைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி பாராட்டும் விழா இரண்டாம் ஆண்டாக நடத்துவதற்கு முடிவு செய்தது. கடந்த ஆண்டு இந்த நிகழ்வில் மன்றம் அமைந்துள்ள சட்டமன்ற தொகுதிக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் கலந்துகொண்டு பிள்ளைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.
அந்த வகையில் இந்த ஆண்டு, புதிதாக அமைந்துள்ள அரசில் செய்தித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.ராஜ்மோகன் அவர்களை அழைக்கலாம் என்று நிர்வாகக் குழு சார்பாக முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, அவருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. அமைச்சர் தரப்பில், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இசைவு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 20.06.26 அன்று மாலை 5 மணியளவில் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, இந்த நிகழ்வை சீர்குலைப்பதற்கான நடவடிக்கையில் சமூக விரோத கும்பல் களத்தில் இறங்கியது. வழக்கம்போல், மன்றத்தைப் பற்றியும், நிர்வாகிகளைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் கேவலமாக எழுதத் தொடங்கினர். இந்த நிகழ்வில் அமைச்சர் திரு.ராஜ்மோகன் கலந்துகொள்ளக் கூடாது என்று அவருக்கு மறைமுகமாக மிரட்டல்களை விடுத்தனர்.
நிகழ்ச்சிக்கு முந்தையநாள் வரை நிகழ்வில் கலந்துகொள்வதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என்று அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்காக அமைச்சர் தரப்பில் கூறப்பட்ட காரணத்திலிருந்தே, சீர்குலைப்பாளர்களின் சதிச்செயல்தான் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
கல்வியில் சாதித்த பத்திரிகையாளர்களின் பிள்ளைகளுக்காக நடத்தப்படும் பாராட்டு விழாவை சீர்குலைத்த சதியாளர்கள் இதன் மூலம் எதைச் சாதித்தார்கள் என்று தெரியிவில்லை.

இருந்தபோதும், நிகழ்ச்சியைத் திட்டமிட்டது போல் நடத்தி முடித்தோம். அமைச்சர் வராவிட்டாலும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு நமது பத்திரிகையாளர்களின் பிள்ளைகளுக்கு மிக அருமையான அறிவுரையை வழங்கியதன் மூலம் நிகழ்வு மிக, மிக சிறப்பாக நடந்து முடிந்தது.
பிள்ளைகளுக்கான பாராட்டு விழா நிகழ்வு நடைபெற்ற மறுநாள் (21.06.26) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினராக உள்ள ஒரு பத்திரிகையளாரின் இல்ல சுப நிகழ்வு மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பத்திரிகையாளர்களின் பிள்ளைகளுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொள்ளாத அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மன்றத்திற்கு வந்துள்ளார். அது, மன்ற வளாத்தில் நடைபெறும் ஒரு தனியார் நிகழ்வு என்ற வகையில் அவர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன் மன்றத்திற்குத் தெரியாமல் நடத்தப்பட்ட மரம் நடும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம், கலந்துகொள்ளக் கூடாது என்று முடிவெடுக்க வேண்டிய உரிமை அனைவருக்கும் உள்ளது. அதன்பொருட்டு யாரையும், யாரும் வற்புறுத்த முடியாது. ஆனால், சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் எந்த வித முன்னறிவிப்புமின்றி, நிர்வாகிகளின் ஒப்புதலின்றி, திடீரென்று சிலரால் ஏற்பாடு செய்யப்பட்ட மரக்கன்று நடும் நிகழ்வில் அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பங்கேற்றது வருத்தமளிக்கிறது. இதை அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.

கொள்ளையடித்து, குடித்து, கும்மாளமடிக்கும் இடமாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீண்டும் மாற்றவதற்காகத் துடித்துக்கொண்டிருக்கும் நயவஞ்சக கும்பலும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருபவர்களும் ஒன்று சேர்ந்து திட்டமிட்ட நாடகத்தில், அறிந்தோ அறியாமலோ அமைச்சர் திரு.ராஜ்மோகன் சிக்கிக்கொண்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.
ஆகவே, பத்திரிகையாளர் மன்றத்தையும், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த நாடகத்தின் பின்னணியில் செயல்பட்ட அனைவரும் பத்திரிகையாளர்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் உரிய நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் அனைத்து பத்திரிகையளார்களுக்கும் உறுதியளிக்கிறது.
பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக மன்றம் சார்பாக மேற்கொண்டு வரும் முயற்சிகளை சீர்குலைப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர்களின் சதிகள் அனைத்தையும் முறியடித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மாண்பும், ஜனநாயகத்தன்மையும் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.















