``மது அருந்த தண்ணீர் பாட்டில் தராததால் அடித்துக் கொன்றோம்" - வடமாநில தொழிலாளி கொ...
அமோனியா கசிவு: "இருவர் உயிரிழப்பு; 23 பேர் ஐ.சி.யூ-வில்... விபத்துக்கு இதுதான்...' - அமைச்சர் குமார்
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சிலருக்கு வாய், மூக்கிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலுள்ள சில மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் விஜய் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டிருக்கிறார். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொதுச் சுகாதாரக் கூடுதல் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழு, 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், 3 நாள்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

அமைச்சர் குமார் பேசுகையில், "இது ரொம்ப துயரமான சம்பவம். 60 பெண்களும், 4 ஆண்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். முதல்வர் இச்சம்பவம் பற்றி அறிந்ததும் ரொம்ப வேதனைப்பட்டார். இனிமேல், இதுபோல் சம்பவம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்டோரை கவனித்துக் கொள்ள, உயர்மட்ட மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்தையும், முதல்வரிடம் அப்டேட் செய்துக் கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களில் பலர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இறால் சேமிப்பு தொழிற்சாலை அது. அங்குள்ள கூலண்டில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. விசாரணைக்கு கேட்டிருக்கிறோம். அது வந்தப் பிறகு கூடுதல் விவரத்தை தெரிவிக்கிறோம். தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மீது எஃப்.ஐ. ஆர் போடப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் ஐ.சி.யூ-வில் இருக்கிறார்கள்." எனத் தெரிவித்திருக்கிறார்.
















