திருவள்ளூர்: தொழிற்சாலையில் அமோனியா கசிவு; பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழப்...
சபரிமலை: கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஏ.ஐ, ட்ரோன் தொழில்நுட்பம்; திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு!
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைச் சீராகக் கட்டுப்படுத்தவும், அடுத்த மண்டல காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிரடி முடிவெடுத்துள்ளது. கொச்சியில் நடைபெற்ற திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உயர்நிலைக் கூட்டத்தில் தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஜெயகுமார் மற்றும் ஏ.டி.ஜி.பி மனோஜ் ஆபிரகாம் ஆகியோர் இந்தத் திட்டத்தை இறுதி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மண்டலகால மகரவிளக்கு பூஜைகளின்போது சபரிமலையில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டன. கூட்ட நெரிசலை தவிர்க்க உயர் நீதிமன்றம் தலையிட்டு பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சபரிமலையின் முழுமையான பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் கூட்டத்தை கையாளும் விதமாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஹை-ரெசல்யூஷன் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் சபரிமலையின் ஒட்டுமொத்தப் பகுதியும் ஜி.பி.எஸ் மேப்பிங் செய்யப்படும். அதன் மூலம் எந்தெந்த இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். நிலக்கல், பம்பா, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் மற்றும் சரங்குத்தி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் இனிவரும் மண்டல காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய முடியும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உறுதியாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கூட்ட நெரிசல் ஏற்படும் பட்சத்தில், அது குறித்த உடனடித் தகவல்கள் காவல்துறையினருக்கு வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். முகம் அங்கீகார தொழில்நுட்பம் மூலம் கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகளைக் அடையாளம் காணவும் ஃபேஷியல் ரெக்கக்னிஷன் கேமராக்கள் பயன்படுத்தப்படும். நிலக்கல் மற்றும் பம்பா-வில் அமைக்கப்படும் டிஜிட்டல் திரைகள் மூலம், தரிசனத்திற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்ற விவரம் பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும். வாகன நெரிசலைத் தவிர்க்க நிலக்கல்லில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி செய்யப்படும். வழித்தடங்களில் குப்பைகள் தேங்குதல், குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் மருத்துவ அவசரநிலைகளை ஏஐ தொழில்நுட்பம் தானாகவே கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும்.

இந்தத் திட்டத்திற்காக கும்பமேளா போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகளில் கூட்டத்தை மேலாண்மை செய்த நிறுவனங்கள் உட்பட, மூன்று முக்கிய நிறுவனங்களுடன் தேவஸ்வம் போர்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தப் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். இதற்கிடையில், வெளிமாநில பக்தர்களுக்காக 'சபரிமலை சந்தேசம்' என்ற பெயரில் சமூக ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். விர்ச்சுவல் க்யூ (ஆன்லைன்) முன்பதிவு முறையை அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய இது உதவும். இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஜெயகுமார் கூறுகையில், "இந்தத் திட்டத்தை செயல்படுத்த காவல்துறை மற்றும் தேவஸ்வம் ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இது முற்றிலும் சபரிமலையின் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்காகத் தனியாக முன்னெடுக்கப்படும் திட்டமாகும்" என்றார்.



















