``மது அருந்த தண்ணீர் பாட்டில் தராததால் அடித்துக் கொன்றோம்" - வடமாநில தொழிலாளி கொ...
அமோனியா கசிவு: "தமிழ்நாட்டை நம்பி வந்த பிள்ளைகள்... கண், காது, மூக்கில் ரத்தம் வந்து..." - பிரேமலதா
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சிலருக்கு வாய், மூக்கிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலுள்ள சில மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் விஜய் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டிருக்கிறார். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொதுச் சுகாதாரக் கூடுதல் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழு, 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், 3 நாள்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூற சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விரைந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடையே, "இது ஒரு கருப்பு நாள். உழைப்பை தேடி தமிழகத்துக்கு வந்த பிள்ளைகள் இப்படி கிடக்கிறார்கள். எல்லாமே பெண் பிள்ளைகள்.
அமோனியாவுடைய வீரியம் அதிகமாக இருக்கிறது. எல்லாருமே தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள். எல்லாருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். ஸ்டான்லி, வேல்ஸ்,வெங்கடேஷ்வரா என்று நிறைய மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
என்னால் வீட்டிலிருந்து செய்தியை பார்க்க முடியவில்லை. கண், காது, மூக்கில் இருந்தெல்லாம் இவர்களுக்கு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை நம்பி வந்த பிள்ளைகளுக்காக பிரார்த்திக்கிறேன்." எனக் கூறியிருக்கிறார்
















