The Wedding of VIROSH: இந்தியாவின் மோஸ்ட் வான்டட் திருமணம்: விஜய் - ராஷ்மிகா வெட...
`அவரை வீழ்த்த நினைக்கும் ஆயிரம் கொக்குகளுக்குச் சொல்கிறேன்!' - சிவகார்த்திகேயன் குறித்து இரா.சரவணன்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
பிப்ரவரி 27-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது.

சிவகார்த்திகேயனைக் கணிக்க முடியாது!
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் இரா.சரவணன், "பத்திரிகையாளராக 15 வருடங்கள் இருந்திருக்கிறேன். சினிமாவில் 10 வருடங்கள் இருந்திருக்கிறேன். இந்த 25 வருடங்களில் நான் எத்தனையோ அரசியல் ஆளுமைகளை, பிரபலங்களைப் பார்த்திருக்கிறேன், கடந்திருக்கிறேன்.
ஆனால் என்னால் கணிக்கவே முடியாத ஒரு நபர் என்றால், அது சிவகார்த்திகேயன் தான். எந்த இடத்தில் என்ன செய்வார் என்று கணிக்கவே முடியாது.
தேர்தல் நேரத்தில் கட்சிகள் யாருடன் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைக்கூட நான் சொல்லிவிடுவேன். ஆனால் இன்டஸ்ட்ரியில் சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி வைப்பார் என்பதை கணிக்கவே முடியாது.
அடுத்து சிவகார்த்திகேயன் இந்த இயக்குநரை வைத்துதான் படம் பண்ணப் போகிறார் என்று ஒரு 10 இயக்குநர்களின் பெயரை வைத்து பட்டியல் வெளியானது.

இந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வரலாமா?
ஆனால் அந்தப் பட்டியலில் இல்லாத சிவகுமார் முருகேசனை வைத்துதான் படம் பண்ணியிருக்கிறார். பல விஷயங்களை இந்தப் படத்தில் இயக்குநர் அசால்ட்டாகச் செய்திருக்கிறார்.
இந்தப் படம் வெளியான பிறகு பெரிய ஹீரோக்கள் பின்னாடி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா, இனி நல்ல கதைகள் பின்னாடி ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கொட்டுக்காளி படம் வெளியான போது நான் தம்பி சிவகார்த்திகேயனை சந்திக்கப் போயிருந்தேன். 'படம் ஜெயித்தால் சம்பாதித்துக்கொள்வேன். படம் தோற்றால் அதற்கான கடனை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வரலாமா? என்று எப்படி கேட்கிறார்கள்' என சிவகார்த்த்திகேயன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.
சிவகார்த்திகேயன் மீதான விமர்சனங்கள்.!
அதுமட்டுமன்றி 'வந்தோமோ ? நடிச்சோமான்னு இல்லாமா? எதுக்கு படமெல்லாம் தயாரிக்குறாருன்னு' சிவகார்த்திகேயனை விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்களுக்கான பதிலடிதான் இந்த தாய் கிழவி.
நியாயமான விமர்சனங்களை அவர் ஏற்றுக்கொள்வார். கொக்கு ஒருபோதும் கெளுத்தி மீனை விழுங்காது. ஏன்னென்றால் மீனின் முள் குத்தி கொக்கு இறந்துவிடும்.

இயல்பான எதிர்வினைகளை, விமர்சனங்களை வைத்தால் பிரச்னை கிடையாது. ஆனால் வன்மங்களால் சிவகார்த்திகேயனை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற ஆயிரம் கொக்குகளுக்கு சொல்கிறேன் சிவகார்த்திகேயன் ஒரு கெளுத்தி மீன்" என்று பேசியிருக்கிறார்.

















