`அந்தப் பதவிக்கு சம்பளம் 10,000 ரூபாய்.!' - முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தள...
"அவர்தான் நான் பெயிலாக காரணம்" - ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து கத்தியால் குத்திய மாணவன்
மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு 17 வயது மாணவர் ஒருவர், தான் படித்ததற்கு சான்றிதழ் வாங்க வந்தார். அவர் நேரடியாக பள்ளி முதல்வர் அறைக்குச் சென்று தான் 2023ம் ஆண்டு வரை படித்ததற்கு டி.சி சான்றிதழ் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
உடனே சான்றிதழுக்கான கட்டணத்துடன் விண்ணப்பிக்கும்படி பள்ளி முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனால் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்தார்.
மேலும் தான் 2023ம் ஆண்டு பள்ளியில் பெயிலாவதற்குக் குறிப்பிட்ட வகுப்பு ஆசிரியர்தான் காரணம் என்று கூறினார். இதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் முதல்வர் அறைக்கு வந்தார். அவரிடமும் அந்த மாணவர் இது தொடர்பாக வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த மாணவன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை வயிற்றில் குத்தினார்.
இதனைத் தடுக்க முதல்வரும், பள்ளி ஊழியரும் முயன்றனர். ஆனால் அவர்களையும் மாணவன் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான்.

கத்திக்குத்தில் காயம் அடைந்த ஆசிரியர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மாணவனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் விவேக் ஜாதவ் கூறுகையில், "சத்ரபதி சாம்பாஜி நகரில், 2023-ஆம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்து அடுத்த ஆண்டு வகுப்பில் சேராத மாணவர் ஒருவர், லிட்டில் ப்ளவர் பள்ளிக்குச் சென்று தனது மாற்றுச் சான்றிதழை (TC) வழங்குமாறு கோரினார்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து அதற்கான கட்டணத்தைச் செலுத்துமாறு முதல்வர் அவரிடம் கூறியபோது, அந்த மாணவர் அதை மறுத்துவிட்டார். தான் தேர்வில் தோல்வியடைந்ததற்கும், அதன்பின் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கும் தனது 2023-ஆம் ஆண்டு வகுப்பு ஆசிரியரே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், அந்த மாணவர் சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் முற்றிய நிலையில் பள்ளிக்குள்ளேயே அவரை கத்தியால் குத்தினார்'' அவர் தெரிவித்தார்.
கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியர் பெயர் விஷால் என்று தெரிய வந்துள்ளது. கத்தியால் குத்தப்பட்ட காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சி வைரலாகி இருக்கிறது.
















