மதுரை: ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி; உறவினர்கள் போராட்டம...
'இது சட்டமன்றமா... இல்ல சண்டை மன்றமா?' - திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினரான பிரேமலதா அவையில் திடீரென, 'இது சட்டமன்றமா இல்லை சண்டை மன்றமா...' என கொந்தளித்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ ராஜா பேசுகையில் தவெக எம்.எல்.ஏ மதாரை விமர்சித்து பேசியிருந்தார். உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுந்து, திமுக இஸ்லாமியர்களுக்கு என்ன செய்தது என பேச்சை ஆரம்பிக்க, அங்கிருந்து ஒரு மணி நேரத்துக்கு திமுகவும் தவெகவும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சலசலப்பை ஏற்படுத்தினர்.
இந்த சமயத்தில் திடீரென எழுந்த பிரேமலதா விஜயகாந்த், `மானியக் கோரிக்கையை தவிர எல்லா நிகழ்ச்சியும் நடக்கிறது. ஆள் ஆளாக்கு குறை சொல்வதால்தான் ஆறரை மணி வரைக்கும் சட்டமன்றம் நடக்கிறது. எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்வு எழுதப் போவதை போல இரவு பகலாக முன் தயாரிப்பு செய்து வருகிறோம். ஆனால், இங்கே பேசுவதற்கு வாய்ப்பே கிடைப்பது இல்லை. எப்ப பார் சண்டை... சண்டை என்றே செல்கிறது. இப்போதெல்லாம் சட்டமன்றம் பார்க்காமல் டிவியை அணைத்து விடுகிறோம் என மக்கள் கூறுகின்றனர்.

இரவு 3-4 மணி வரைக்கும் மக்களுக்காக பிரச்னைகளை பேச தயாரித்து வைத்துவிட்டு வந்தால் இங்கே சண்டைதான் நடக்கிறது. இது சட்டமன்றம், சண்டை மன்றம் அல்ல. அவர் பேச ஆரம்பிக்கும் வரை நன்றாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தாலே சண்டைதான் (ஆதவ்வை நோக்கி...)' என்றார்.
இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜூனா, 'அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்னை கிடையாது. எங்களுக்கும் விஜயகாந்த் சாரை ரொம்ப பிடிக்கும். உண்மைக்கு மாறாக பேசும் போதுதான் நாங்கள் எழுந்தரிக்கிறோம். எதிர்க்கட்சி என்பது தீப்பெட்டி போன்றது. அதை பற்றவைத்து பால் காய்ச்சினால் அமைதியாக இருப்போம். கேஸை பிடுங்கிவிட்டு பற்ற வைத்தால் வெடிக்கும்' என்றார்.













