மணல் திருட்டு; அபேஸான கும்பல்... மாட்டு வண்டிகளை ஸ்டேஷனுக்கு ஓட்டிவந்த போலீஸ்!
Nepal: "எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேரின் நிலை குறித்து தெரியவில்லை!"- கண்ணீர் மல்கிய ஜக்கி வாசுதேவ்
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் நேற்று (ஆக. 26) காலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக நேபாள அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும் 750க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி மாயமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் உட்பட பல நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, நேபாளத்திற்கு சுற்றுலாவிற்காக சென்ற 130-க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கோவையில் இயங்கி வரும் ஈஷா யோக மையம் சார்பில் 700க்கும் மேற்பட்டோர் நேபாளம் சென்ற நிலையில் 80 பேர் நிலை குறித்தத் தகவல் தெரியவில்லை என்று அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் பேசிய ஜக்கி வாசுதேவ், “ஈஷா யோக மையம் சார்பில் 700க்கும் மேற்பட்டோர் நேபாளத்திற்கு சென்ற நிலையில் 80 பேர் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நேபாளம், நெதர்லாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 46 பெண்களும், 34 ஆண்களும் அடங்குவர்.
இப்படி ஒரு துயரம் நடக்கும் என தெரியவில்லை. இந்த குழுவில் 3 தன்னார்வலர்கள் மற்றும் 1 மருத்துவரும் உடன் இருந்தனர்.

இதுவரை அதிகாரபூர்வமாக நேபாளத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இப்போது வரை எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் தெளிவாக வெளிவரவில்லை.
நேபாளம் செல்ல அனுமதி கோரி உள்ளேன். மீட்புப் பணியில் எங்களையும் அனுமதிக்குமாறு கேட்டுள்ளேன். மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருக்க மாட்டோம். கடந்த 12 மணி நேரமாக எந்த ஒரு சரியான தகவலும் இல்லாமல் போராடி வருகிறோம்.
எங்களின் ஒரே நோக்கம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் துணை நிற்பதும், அவர்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல், தடயங்களைத் தேடுவதில் உதவுவதும்தான்" என்று ஜக்கி வாசுதேவ் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

















