'சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக கொண்டு வையடா!' - பிரசாரத்தில் ஆவே...
`இதை விட `அதிக லாபம்' வேண்டும்!' - சம்பாதித்த அத்தனை பணத்தையும் இழக்கும் பரிதாபம்! ஏன் இந்த நிலை?!
அதிக பணம் சேர்க்க வேண்டும்; அதுவும் குறுகிய காலத்தில் சேர்க்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. அப்படி நினைப்பவர்களின் நிஜத்தில் நிறைவேறுகிறதா என்று பார்த்தால், ஆசை நிறைவேறுவதற்குப் பதிலாக அத்தனை பணத்தையும் இழக்கும் அபாயமே ஏற்படுகிறது என்பதை சொல்வதற்குப் பல நூறு முதலீட்டாளர்கள் உதாரணங்களாக இருக்கிறார்கள்.
அப்படி அத்தனை பணத்தையும் இழந்த ஒருவர்தான் மகேஷ். மூன்று ஆண்டுகளுக்கு நடந்த சம்பவம் இது. வங்கி எஃப்.டி-யில் இருந்த 7 லட்சம் ரூபாயை எதிலாவது போட்டு அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பது மகேஷின் ஆசை. காரணம், வங்கி எஃப்.டி-ல் கிடைத்த வட்டி வருமானம் குறைவாக இருக்கிறதே என்கிற எண்ணம் அவருக்கு.

பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கினால், நல்ல லாபம் கிடைக்குமா என்று கேட்டுப் பார்த்தார். அதற்கு எந்த நிச்சயமும் இல்லை என்று தெரிய வரவே, அந்த ஆப்ஷனை குளோஸ் செய்தார். அடுத்து மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஒருவரைத் தொடர்பு கொண்டார். அவரோ, மியூச்சுவல ஃபண்ட் குறுகிய காலத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும், நீண்ட காலத்தில் (7 - 10 ஆண்டுகள்) 12% வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்று சொன்னார்.
12% என்பது மகேஷுக்கு மிகவும் குறைவான லாப விகிதமாக இருந்தது. இதைவிட அதிகமான லாபம் எதில் கிடைக்கும் என்பதுதான் மகேஷின் அடுத்த கேள்வியாக இருந்தது.
அப்படி யோசித்து வந்த நேரத்தில், அவருக்கு ஒரு போன் வந்தது. ''வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்கிறோம். 30% வரை லாபம் கிடைக்கும்'' என்று போனில் பேசியவர் சொல்ல, எந்தெந்த நாடுகளின் பங்குகளில் முதலீடு செய்வீர்கள் என்றெல்லாம் கேட்க, போனில் பேசியவர் தெளிவான பதிலைத் தந்தார்.
போனில் பேசியவரிடம் பணத்தைத் தரலாமா, வேண்டாமா என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தாலும், யாரிடம் அதைக் கேட்டு விளக்கம் பெறுவது என்று அவருக்குத் தெரியவில்லை. தவிர, வேண்டாம் என்று சொல்லிவிட்டால், 30% லாபத்தை இழக்க வேண்டுமே! இப்படிப்பட்ட லாபம் வேறு எங்கும் கிடைக்காதே! என்பதுதான் அவருடைய கவலையாக இருந்தது.
என்றாலும், அவருக்கு மீண்டும் மீண்டும் போன் வந்தது. ''சார், மார்க்கெட் ஏறிக்கிட்டே இருக்கு! டைத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. நல்ல சான்ஸை விட்டுறாதீங்க சார்'' என்று போனில் பேசியவர் திரும்பத் திரும்ப சொல்ல, அவரால் அதற்கு மேல் முடிவு எடுக்காமல் இருக்க முடியவில்லை.

''சரி, முதல் தவணையாக 4 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறேன்'' என்று சொன்னார். அவர்கள் சொன்னபடி எல்லாம் செய்ய ஆரம்பித்தார். அவர்கள் அனுப்பிய லிங்கில் பணம் கட்டினார். அவர் கட்டிய பணத்துக்கான திட்ட ரசீது வந்தது. நிம்மதி அடைந்தார் மகேஷ்.
ஒரு மாதம் கழித்து, மீண்டும் அவருக்கு போன் வந்தது. ஒரே மாதத்தில் 20% லாபம் கிடைத்திருக்கிறது. உங்கள் முதலீட்டை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று சொல்ல, மீண்டும் 1 லட்சம் ரூபாயைக் கட்டினார். இன்னும் ஒரு மாதம் கழித்து மீண்டும் போன். ''30% லாபம் வந்துவிட்டது. உங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகி உள்ளது. இதை சரிசெய்ய 50,000 ரூபாய் கட்டுங்கள்'' என்று சொல்ல, ''இதைப் பற்றி நீங்கள் முன்பே சொல்லவில்லையே...?'' என்று கேட்டுவிட்டு, போனை வைத்தார்.
நன்கு யோசித்தவருக்கு சந்தேகம் வந்தது. ''50 ஆயிரம் ரூபாயைக் கட்டிவிட்டு, மொத்தப் பணத்தையும் எடுத்துவிடலாம்'' என்று நினைத்து பணத்தைக் கட்டியவர், ''எல்லாப் பணத்தையும் திரும்பத் தந்துவிடுங்கள். அவசரச் செலவு வந்திருக்கிறது'' என்றார். ''ஒகே சார், இன்னும் இரண்டு நாள்களில் பணம் உங்க பேங்க் அக்கவுண்டுக்கு வந்துவிடும்'' என்று சொல்ல, எப்போது பணம் வரும் என்று காத்துக்கொண்டு இருந்தார் மகேஷ்.
இரண்டு நாளில் பணம் வரவில்லை. மீண்டும் அதே போன் நம்பருக்கு போன் செய்தார். போன் நம்பர் ஆஃப் ஆகியிருந்தது. அடுத்த நாள்களில் தினமும் 10 முறையாவது போன் செய்தார். எந்தப் பதிலும் இல்லை. தன் பணம் 5.5 லட்சம் ரூபாய் மோசடியாளர்களிடம் பறிபோய் இருப்பதை உணர்ந்த மகேஷுக்கு மாரடைப்பே வந்துவிடும் போலிருந்தது. கஷ்டப்பட்டு சேர்த்த பணம் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இழந்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வு அவரை நடைப்பிணமாக்கியது.

அதிக லாபம் சம்பாதிக்க நினைத்தது மகேஷின் தவறா? இல்லை, அதிக லாபம் சம்பாதிக்க நினைப்பது அத்தனை பேரின் எண்ணமாக இருக்கிறது. அப்படி இருக்க அது எப்படி தவறாக இருக்க முடியும்?
ஆனால், அதிக லாபம் என்றால் எவ்வளவு என்பது சரியாகத் தெரிந்தால், அந்த லாபத்துக்கு நாம் ஆசைப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை நம்மால் எளிதாக முடிவு செய்ய முடியும்.
பாதுகாப்பான முதலீடு என்று சொல்லப்படும் வங்கி எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி 6% - 7% என்கிற அளவில் இருக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிர்ணயத்து உள்ளது. பணவீக்கம் உயர உயர வட்டி விகிதமும் அதிகரிக்கும். அதாவது, விலைவாசி அதிகமாகும்போது மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கும். மக்கள் அதிகம் செலவு செய்வதைத் தடுத்து, பணத்தை சேர்த்து வைக்க, வட்டி விகிதத்தை உயர்த்தும். பணவீக்கம் குறைந்தால், வங்கி வட்டி விகிதமும் குறையும்!
இந்த வட்டி விகிதம்தான் அடிப்படை வருமான விகிதம் ஆகும். இந்த அடிப்படை வருமான விகிதத்தில் இருந்து அதிக லாபம் கிடைக்க வேண்டும் எனில், அதற்கேற்ப ரிஸ்க் எடுக்க வேண்டும். தனியார் சிறுவங்கிகளில் 8% - 9% வரை வட்டி வருமானம் கிடைக்கிறது. கடன் பத்திரங்களில் 8% - 11% வரை வட்டி கிடைக்கும். ஆனால், இவற்றில் ரிஸ்க்கைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சந்தை, கடன் சந்தை, இந்த இரண்டிலும் முதலீடு செய்யும் ஹைபிரீட் திட்டங்கள் என மூன்று வகை உண்டு. கடன் சந்தையில் முதலீடு செய்த பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், வருமானம் 7% - 8% என்கிற அளவில்தான் இருக்கும். ஹைபிரீட் திட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முதலீடு செய்தால், 10% லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
சந்தை சார்ந்த திட்டங்கள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்து வைத்திருந்தால், 12% வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதில் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும்போது முதல் இரண்டு ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை 10% - 20% வரை குறைய வாய்ப்பு உண்டு. இந்த இழப்பைப் பார்த்து பயப்படக் கூடாது. 7 முதல் 10 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வைத்திருக்கும்போது 12% லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பங்குச் சந்தை நன்கு செயல்படும்பட்சத்தில் 12% மேல்கூட லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பது கடந்த கால வரலாறு. ஒருவருக்கு ஆண்டுதோறும் 12% லாபம் கிடைத்தாலோ போதும், அவருடைய முதலீடு 7 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாகிவிடும்.
ஆக, 12% லாபம் கிடைத்தால் போதும். நீண்ட காலத்தில் கணிசமான அளவில் நாம் சொத்தினை சேர்க்க முடியும் என்கிறபோது அந்த அளவில் நம் எதிர்பார்ப்பை அமைத்துக்கொள்வதை விட்டுவிட்டு, 20%, 30% என்று ஆசைப்பட்டால், தவறான திட்டங்களில் பணத்தைப் போட்டு, முழுப் பணத்தையும் இழக்கும் அபாயத்தில்தான் நாம் மாட்டுவோம்!

இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001
நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.



















