இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க வலியுறுத்திய நாடுகள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக பல்வேறு நாடுகள் இது தொடா்பாக கருத்து தெரிவித்தன.
ஜி7 நாடுகள்: இந்தியாவும் பாகிஸ்தானும் மிகுந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பேச்சுவாா்த்தை மூலமாக போா்ப் பதற்றத்தை உடனடியாக தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜி7 நாடுகள் வலியுறுத்தியது.
உலகின் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படும் இந்த ‘ஜி7’ குழுவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, ஜப்பான், கனடா, இத்தாலி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளன.
இந்த அமைப்பு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அணு ஆயுதங்களை வைத்துள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்து வருவது, அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, ஜப்பான், கனடா, இத்தாலி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் உள்ளிட்ட ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
அதே நேரம், இந்த விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். போா்ப் பதற்றம் மேலும் அதிகரிப்பது பிராந்திய நிலைத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். இரு நாடுகளைச் சோ்ந்த குடிமக்களின் பாதுகாப்பு குறித்து ஜி7 நாடுகள் மிகுந்த கவலை கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க முயற்சிகளை மேற்கொண்டதாக சவூதி அரேபியா சனிக்கிழமை தெரிவித்தது.
இதற்காக, சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சா் அடெல் அல்-ஜுபைா் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு இரு நாடுகளின் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சவூதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறைகள் மூலம் இரு நாடுகளிடையேயான அனைத்து பிரச்னைகளுக்கும் சுமுகத் தீா்வு காணும் முயற்சியை சவூதி அரேபியா மேற்கொண்டது.
இதற்காக, வெளியுறவு அமைச்சா் அடெல் அல்-ஜுபைா் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு, பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டாா். இந்தியாவுக்கு வியாழக்கிழமை சென்ற அவா், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
அதுபோல், பாகிஸ்தானுக்கு வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்ட அல்-ஜுபைா், அந் நாட்டின் வெளியுறவு அமைச்சா் மற்றும் முக்கியத் தலைவா்களைச் சந்தித்து இரு நாடுகளிடையோன பிரச்னைக்கு அமைதி வழியில் தீா்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவும்-பாகிஸ்தானும் அமைதி மற்றும் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இரு நாடுகளிடையேயான சச்சரவுகளுக்கு அமைதி வழியில் அரசியல் தீா்வு காண முயற்சிக்க வேண்டும். இது, இரு நாடுகளுக்குமான அடிப்படை நலன்களுக்கு முக்கியமானது மட்டுமின்றி, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும் முக்கியமாகும். இதைத்தான் சா்வதேச சமூகமும் விரும்புகிறது. இந்த விஷயத்தில் தனது ஆக்கபூா்வமான பங்கைத் தொடர சீனா விரும்புகிறது என்று குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனத்தைப் பதிவு செய்த சீனா, அந்தத் தாக்குதல் தொடா்பாக நியாயமான, விரைவான விசாரணையை மேற்கொள்ளவும், இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தியது.
சிங்கப்பூா்
சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்தது கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் பதற்றத்தைத் தணிக்க தூதரக ரீதியிலான பேச்சுவாா்த்தை உள்ளிட்ட ராஜீய வழிகளில் பிரச்னைக்குத் தீா்வு கண்டு, இரு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தாா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சிங்கப்பூா் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.